Ad Widget

இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் – சுமந்திரன்

வலிகாமம் வடக்கு காணிகளிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம் எனவும் அடுத்த கட்டமாக அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக நேற்று திங்கட்கிழமை (29) சென்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘1000 ஏக்கர் விடப்படுவதாகக் கூறப்பட்ட போதும், அதற்கும் குறைவான இடங்களே விடப்பட்டுள்ளன. சில பகுதிகளில் சிறிய சிறிய பகுதிகள் விடுவிக்கப்படவேண்டியுள்ளது. தெல்லிப்பளை வைத்தியசாலை பக்கமாக 46 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டால் மக்கள் வைத்தியசாலைக்கு இலகுவாக சென்றுவரமுடியும்’ என்றார்.

‘இது தொடர்பில் ஆராய்ந்து சிபாரிசு செய்வதாக யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த தெரிவித்தார். மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து நாங்கள் அசையவில்லை. காணிகள் விடுவிக்கப்பட்டு மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவதற்கு தொடர்ச்சியாக அழுத்தங்கள் கொடுப்போம்’ என்று அவர் மேலும் கூறினார்.

Related Posts