Ad Widget

இராணுவத்தின் மீதான கரிசணை ஏன் தமிழ் அரசியல் கைதிகள் மீதில்லை: சுமந்திரன்

பதினாறு மாதங்களாக சிறை வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் தொடர்பில் அக்கறை கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏன் 16 ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் சிந்திப்பதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் சாடியுள்ளார்.

ஊடகமொன்று சுமந்திரன் வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், நாட்டிலுள்ள சட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும் பொதுவானதாகும். இராணுவத்திற்கும், பொதுமக்களுக்கும் என சட்டங்களை வேறுபடுத்தி நோக்க முடியாது.

இராணுவ புலனாய்வாளர்கள் 16 மாதங்களாக சிறை வைக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி கவலை வெளியிட்டு வருகிறார். அவர்கள் குற்றம் புரிந்திருந்தால் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும். இல்லையேல் அவர்கள் நிரபராதியாயின் அவர்களை விடுதலை செய்யப்பட வேண்டும். இதுவே அனைவருக்கும் பொதுவான சட்டம்.

ஆனால், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 16 வருடங்களாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளில் சிலருக்கு எதிராக இன்னும் வழக்கே தாக்கல் செய்யப்படவில்லை. இவர்கள் குறித்து ஜனாதிபதியும் சிந்திப்பதாக தெரியவில்லை.

அவர்களை கடந்த நவம்பர் மாதம் விடுவிப்பதாக உறுதியளிக்கப்பட்ட போதிலும், அவ்உறுதி இதுவரை பூரணமாக நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts