Ad Widget

இராணுவத்திடம் இருந்து காணியை விடுவிக்குமாறும் கோரிக்கை!!

தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ஆம் திகதி தமிழ்மக்களால் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தமது உறவுகளை நினைந்து வருடம் தோறும் கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் அனுஸ்டிக்கப்படுவது வழமை,

அந்த வகையில் இவ்வாண்டும் மாவீரர் நாள் நிகழ்வுகள் மேற்கொள்ள தமிழர் தாயகப் பகுதிகள் மாத்திரமின்றி தமிழ் மக்கள் வாழும் தேசமெங்கும் தயாராகி வருகிறது.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களும் தயாராக ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை இராணுவத்தின் 24 ஆவது SLNG படைப்பிரிவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் செய்வதற்கான சிரமதான பணிகள் அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினரால் இன்று (15) ஆரம்பிக்கப்பட்டது.

முன்னதாக மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தியதை தொடர்ந்து சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இவ்வாண்டும் கார்த்திகை 27 மாவீரர் நாள் உணர்வு பூர்வமாக இடம்பெறும் எனவும் அனைத்து மாவீரர் பெற்றோர் உறவுகளையும் கலந்து கொள்ளுமாறும் முன்னாயத்த பணிகளிலும் ஒத்துழைப்பு வழங்குமாறும் பணிக்குழுவினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

அத்தோடு மாவீரர் நாளினை நினைவு கூருவதற்கான உரிய இடவசதி இல்லாது தாம் துன்பப்படுவதாகவும் குறித்த காணியை விடுவித்து உதவுமாறும் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts