மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் நிறுவப்பட்டிருந்த இராமநாதன் சிலை நேற்று இரவோடு இரவாக வெளிக் கேற்றினைப் பூட்டிவிட்டு பைக்கோ மூலமாக அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது.
அரசியல் பின்புலம் காரணமாகவே அது இரவோடிரவாக அகற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
எனினும் குறித்த பாடசாலையின் அதிபர், வலிகாமம் வலயக் கல்விப்பணிப்பாளர், பேராசிரியர் சிற்றம்பலம் ஆகியோரின் முன்னிலையில் இந்தச் சிலை நேற்றிரவு அகற்றப்பட்டது.
அந்த சிலையை அகற்றுவதற்கு ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டது. ஆனால் மழை காரணமாக அகற்றுவதில் தாமதம் நிலவியது. இந்த நிலையிலேயே நேற்று அது அகற்றப்பட்டது.
குறித்த சிலை ஏற்கனவே கால் பகுதியில் உடைந்திருந்தது. அந்தச் சிலை இராமநாதனின் தோற்றத்தில் காணப்படவில்லை. எனவே அதனை அகற்றி அதற்குப் பதிலாக புதியதொரு சிலையும் செய்யப்படவுள்ளதாக வலயக்கல்விப் பணிப்பாளர் சந்திரராஜா தெரிவித்தார்.