Ad Widget

இரணைமடு குடிநீர் விநியோகம்: விஷேட திட்டம் வகுக்குமாறு ஜனாதிபதியிடம் டக்ளஸ் கோரிக்கை

இரணைமடு குளத்திலிருந்து யோழ்ப்பாணத்துக்கு குடிநீர் விநியோகிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த விசேட திட்டமொன்றை வகுத்து வடக்கு மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்கு நிலையான தீர்வைக் காண ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

ira1

யாழ்.குடாநாட்டின் வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டமொன்று, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்ப்பாணம், கச்சேரியில் செவ்வாய்க்கிமை (12) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது,

வட மாகாண சபையை பொறுப்பேற்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இரணைமடுக்குளத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் விநியோகிக்கும் திட்டம் தொடர்பில் அக்கறை செலுத்தாமல் உள்ளனர். இந்த நிலை தொடருமாக இருந்தால் இந்த குடிநீர் விநியோகத் திட்டத்துக்கான நிதி திரும்பிவிடக்கூடிய ஆபத்து ஏற்படக்கூடும்.

வழமையைவிடவும் வடமாகாணம் பாரிய வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளது. யாழ். குடாநாடு மட்டுமல்லாது கிளிநொச்சியிலும் பளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி போன்ற பகுதிகளும் வறட்சியினால் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு முகம்கொடுத்துள்ளது. இவ்விடயத்தில் வட மாகாண சபையினர் எவ்விதமான பங்களிப்பைச் செய்துள்ளனர் என்றும் வட மாகாண செயலாளரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பினார்.

எவ்வாறெனினும் மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள வறட்சி நெருக்கடிக்கு தீர்வு காண்கின்ற நடவடிக்கையில் பிரதேச செயலாளர்களும் பிரதேச சபைச் செயலாளர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

இரணைமடு குளத்திலிருந்து யோழ்ப்பாணத்துக்கு குடிநீர் விநியோகிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வடமாகாண சபையானது, அரசியல் காரணங்களைக் கூறி இழுத்தடிப்பு செய்கிறது.

ஆனால் இரணைமடுக் குளத்தை புனரமைப்புச் செய்து. நீர்க் கொள்ளளவை அதிகரித்து வடமாகாணத்தின் பல பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவது காலத்தின் அவசியமாகும். வடக்கு மாகாண சபையைப் பொறுப்பேற்றிருப்பவர்கள் மேற்படி திட்டத்தை செயற்படுத்த விரும்பாமலும் செயற்படுத்தத் தெரியாமலும் குடிநீர் விநியோகத்திட்டத்தை இழுத்தடிப்புச் செய்கின்றனர்.

எனவே மேற்படித் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி என்றவகையில் விசேட திட்டமொன்றை வகுத்து வடக்கு மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்கு நிலையான தீர்வைக் காண வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இது தொடர்பில், ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் நேரடியாக கோரிக்கை விடுக்கவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த விசேட கூட்டத்தில் அரசங்க அதிபர், உதவி அரசாங்க அதிபர், மாவட்ட திட்டபணிப்பாளர், மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர், மாவட்ட விவசாய பணிப்பாளர், நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அதிகாரிகள், மாகாண ஆணையாளர் கமநலசேவைகள் அமைச்சு, பிரதேச யெலாளர்கள், பிரதேச சபைச் செயலாளர்கள், மற்றும் அரச அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Related Posts