Ad Widget

இம்முறை யானையுடன் கைகோர்க்கும் முஸ்லிம் காங்கிரஸ்!

ஐக்கிய தேசியக் கட்சித்தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடலொன்று வியாழக்கிழமை (02) காலையில் ஸ்ரீகொத்தாவில் இடம்பெற்றுள்ளது.

இதில் ஐ.தே.க தவிசாளர் மலிக் சமரவிக்கிரம, பொதுச் செயலாளர் கபீர் ஹாஷிம் ஆகியோரும் பங்குபற்றியுள்ளனர்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியோடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிடுவது பற்றி ஆராயப்பட்டதாக தெரியவருகிறது. இப்பேச்சுவார்த்தை நம்பிக்கையூட்டுவதாகவும், திருப்தியளிப்பதாகவும் அமைந்ததாக கூறப்படுகிறது.

அத்துடன், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் அதன் பிரதிநிதிகளாக அஷ்ஷெய்க் நஜா முஹம்மத், சிராஜ் மஹ்ஷுர் ஆகியோர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமை வியாழன் பிற்பகல் அவரது இல்லத்தில் சென்று சந்தித்து எதிர்வரும் தேர்தலில் கருத்தொற்றுமையுடனும், இணக்கப்பாட்டுடனும் செயலாற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றிக் கலந்துரையாடியுள்ளனர்.

இதில் கல்முனை முதல்வரும், முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமுமான நிசாம் காரியப்பரும் பங்குபற்றியுள்ளார்.

இதேவேளையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிஉயர்பீடக் கூட்டம் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நடைபெற்று எதிர்வரும் தேர்தலில் கட்சி போட்டியிடும் விதம் குறித்து அலசி ஆராயப்படுகிறது.

Related Posts