Ad Widget

இனிமேல் இளையராஜா பாடல்களை பாடப்போவதில்லை: எஸ்.பி.பி

இசையமைப்பாளர் இளயராஜாவால் அனுப்பப்பட்ட சட்ட எச்சரிக்கை அறிக்கையை தொடர்ந்து இனிமேல் இளையராஜாவின் பாடல்களை மேடைகளில் படமாட்டேன் என பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அதிரடி அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

காலத்தால் அழியா காவியப் பாடல்களை கொடுத்த, இசையமைப்பாளர் இளையராஜாவும், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியும் இணைந்த கூட்டணியில் வெளிவந்த பல பாடல்கள் இசை ரசிகர்களிடையே தனி இடத்தை பிடித்திருக்கின்றன. இந்நிலையில் தற்போது இருவருக்குள்ளும் ஒரு சிறு முரண்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளது.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திரையுலகுக்கு வந்து இந்த ஆண்டோடு 50 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பல்வேறு நாடுகளில் சுற்றுப்பணம் செய்து இசை நிகழ்ச்சிகளை செய்து வருகிறார். குறித்த இசை நிகழ்ச்சிகளை எஸ்.பி.பியின் மகனும், பின்னணி பாடகருமான சரண் முன்னின்று நடத்தி வருகிறார்.

அமெரிக்காவில் தற்போது சுற்றுப்பயணம் செய்து நிகழ்ச்சிகளை நடத்திவரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு இளையராஜா தரப்பிலிருந்து அதிர்ச்சி தரக்கூடிய நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதாவது, குறித்த சுற்றுப்பயணத்தை முன்னின்று ஏற்பாடு செய்த நிறுவனத்துக்குத்தான் இளையராஜா தரப்பில் இருந்து சட்ட எச்சரிக்கை கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் தன்னுடைய முறையான அனுமதியின்றி தன்னுடைய பாடல்களை எவ்வாறு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மேடையில் பாடலாம் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த சர்ச்சைக்கு பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘அமெரிக்காவில் கடந்த வாரம் சியாட்டெல், லாஸ் ஏஞ்செல்ஸ் மாகாணங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன். தாங்கள் என்மீது காட்டிய அன்புக்கு நன்றி. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, இளையராஜா சார்பில் வழக்கறிஞர் ஒருவர் எனக்கு சில சட்ட எச்சரிக்கை கடிதங்களை அனுப்பியிருந்தார்’. தனக்கு மட்டுமல்லாமல், பாடகி சித்ரா, சரண், விழா ஒருங்கிணைப்பாளர்கள், மற்றும் இசை கச்சேரி நடைபெறும் இடங்களின் நிர்வாகத்தினருக்கும் குறித்த எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த கடிதத்தில், இளையராஜாவின் முன் அனுமதி பெறாமல் அவருடைய பாடல்களை இசைத்தாலோ, அல்லது மேடைகளில் பாடினாலே அது காப்புரிமை மீறலாகும். அதுமாதிரியான உரிமை மீறலுக்கு பெருந்தொகையை அபாராதமாக செலுத்த வேண்டியிருக்கும், அதேநேரத்தில் சட்ட நடவடிக்கைகளுக்கும் ஆளாக வேண்டியிருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘SPB 50’ என்ற நிகழ்ச்சி தன்னுடைய மகனால் தயாரிக்கப்பட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கனடா, ரஷ்யா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், டுபாய் மற்றும் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளோம். ஆனால் அப்போதெல்லாம் இளையராஜாவிடமிருந்து தனக்கு எந்தவித எதிர்ப்பும் வரவில்லை. இருப்பினும் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது மட்டும் ஏன் இந்த எதிர்ப்பு வருகிறதென்பது தனக்கு தெரியவில்லையென குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு மேடைகளில் படுவதற்குள்ள சட்டங்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும், இருப்பினும் சட்டத்தை மதிக்க வேண்டியது தன்னுடைய கடமை என்பதால் இனி வரும் காலங்களில் இடம்பெறும் மேடைநிகழ்ச்சிகளில் இளையராஜாவின் பாடல்களை தான் பாடப்போவதில்லையென குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts