Ad Widget

இனந்தெரியாதவர்களின் வாள் வெட்டில் தாய்,மகள் படுகாயம்

சாவகச்சேரி கச்சாய் தெற்கு பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று சனிக்கிழமை (09) அதிகாலை அத்துமீறி உள்நுழைந்த இனம்தெரியாதோர் இருவர், வீட்டிலிருந்த பெண்களை வெட்டிவிட்டு, அவர்கள் அணிந்திருந்த நகைகள் மற்றும் தொலைபேசி உள்ளடங்கலான 3 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களைத் திருடிச் சென்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

இதில், படுகாயமடைந்த குமாரசாமி சிவபாக்கியம் (வயது 54), குமாரசாமி நிரஞ்சனா (வயது 23) ஆகியயோர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து பொலிஸார் தெரிவிக்கையில்,

இன்று அதிகாலை 1 மணியளவில், வீட்டிற்குள் நுழைந்த இருவர், வீட்டில் இருந்த இரு பெண்கள் அணிந்திருந்த நகைகளை கழற்றித் தரும்படி கேட்டுள்ளனர்.

அதற்கு மேற்படி இரு பெண்களும் மறுப்புத் தெரிவிக்க, அவர்களை கத்தியால் வெட்டி அவர்கள் அணிந்திருந்த 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளை வலுக்கட்டாயமாக கழற்றிச் சென்றுள்ளனர்.

அத்துடன், வீட்டிலிருந்த 1 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தொலைபேசியினையும் திருடிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாகப் சாவகச்சேரி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Posts