Ad Widget

இந்தி படம் தோல்வி ஐஸ்வர்யாராய்க்கு ரூ.3 கோடி நஷ்டம்

நடிகை ஐஸ்வர்யாராய், இந்தி நடிகர் அபிஷேக் பச்சனை மணந்து குடும்பம், குழந்தை என்று இருந்ததால் சினிமாவை விட்டு தற்காலிகமாக ஒதுங்கினார். 3 வருடங்களாக படங்களில் நடிக்கவில்லை. சில மாதங்களுக்கு முன், திடீரென மீண்டும் நடிக்க வந்தார்.

‘ஜாஷ்பா’ என்ற இந்தி படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இது, இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. இந்த படத்தில் நடிக்க ஐஸ்வர்யாராய்க்கு 4 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. அதில் ரூ.1 கோடி முன் பணமாக கொடுக்கப்பட்டது. மீதி, 3 கோடி ரூபாயும் படம் வெளியாகும் போது தரப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

ஆனால் அந்த பணம் படம் முடிந்த பிறகும் அவருக்கு கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஐஸ்வர்யாராய் புறக்கணித்தார். இதைத்தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தைகள் நடந்தன. படம் வெளியான பின்பு லாபத்தில் ஐஸ்வர்யாராய்க்கு பங்கு தரப்படும் என்று கூறப்பட்டது.

இதனை அவர் ஏற்றுக்கொண்டார். ஆனால் படம் வெளியாகி எதிர்பார்த்தபடி ஓடவில்லை. நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐஸ்வர்யாராய் தனக்கு வரவேண்டிய ரூ.3 கோடி பணத்தை இழந்து இருக்கிறார். இது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Posts