Ad Widget

இந்திய பிரதமருக்கு பரிசுப்பொருள் வழங்கக்கூட எங்களை அனுமதிக்கவில்லை – முதல்வர் சி.வி

யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு உண்மையான எமது மனநிலையை எடுத்துக்காட்ட முடியவில்லை என வடக்கு முதல்வர் க.வி விக்னேஸ்வரன் கவலை வெளியிட்டுள்ளார்.

modi cm meet

கடந்த 14ஆம் திகதி இந்திய பிரதமர் மோடி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிந்தார். எனினும் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலர் பாதுகாப்பு பிரிவினரால் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.

இதனால் எங்களுடைய உண்மையான மனநிலையை கூட வெளிப்படுத்த முடியவில்லை என முதல்வர் கவலை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய பிரதமரின் வருகை குறித்து இந்திய தூதரகமே எமக்கு அறிவித்திருந்தது. எனினும் பிரதமரின் நிகழ்ச்சி நிரல் குறித்து டெல்லியே தீர்மானிக்கின்றது என்றும் அங்கிருந்தே ஏற்பாடுகள் நடைபெறுகின்றது என்றும் எமக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் பிரதமரின் நிகழ்ச்சி நிரல் குறித்து எமக்கு அறிவிக்கப்படவில்லை. இறுதிநேரத்திலேயே நிகழ்ச்சி நிரல் வௌியிடப்பட்டது. அதற்கமைய யாழ். பொது நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் நாங்கள் கலந்து கொண்டிருந்தோம்.

எனினும் அங்கு பிரதமரை வரவேற்கும் உரை கூட ஏற்பாடு செய்யப்படவில்லை. அந்தநேரத்தில் யாழ். இந்திய துணைத்தூதரக தூதுவரை அனுகி இங்குவந்துள்ள பிரதமருக்கு வரவேற்பு உரை கூட எங்களால் கூற முடியாதா என கேட்டோம்.

டெல்லியிடம் கேட்டே பதில் கூற வேண்டும் என அவர் எங்களிடம் தெரிவித்திருந்தார். இறுதிநேரத்திலேயே வரவேற்பு உரை வழங்க அனுமதிக்கப்பட்டோம் . அத்துடன் பிரதமருக்கு வழங்கவென எங்களால் பரிசுப்பொருள் ஒன்றும் கொண்டு சென்றோம் .

ஆனால் அதனைக் கூட உள்ளே கொண்டு செல்ல எமக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அத்துடன் பலரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. நாங்களும் கட்டுப்படுத்தப்பட்டோம்.

அவர்களே கூட்டி வந்து அவர்களே அழைத்துச் செல்வது போல இருந்ததே தவிர இங்கு வந்த பிரதமரை நாங்கள் அழைத்துச் சென்றோம் என்று இருக்கவில்லை. அனைத்தையும் டெல்லியே ஏற்பாடு செய்திருந்தது.

பிரதமர் வருகிறார் வரவேற்பதற்கான நடவடிக்கைகளை எடுங்கள் என்று எம்மிடம் அறிவிக்கப்பட்டிருந்தால் நாங்கள் சரியாக செயற்பட்டிருப்போம். எங்களுடைய உண்மையான மனோநிலையினை கூட அவருக்கு எங்களால் எடுத்துக்காட்ட முடியவில்லை என்றும் அவர் மேலும் கவலை வெளியிட்டுள்ளார்.

Related Posts