Ad Widget

இந்தியா இலங்கைக்கு இடையே அணுசக்தி ஒப்பந்தம்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான சிவில் பயன்பாட்டு அணுசக்தி ஒத்துழைப்பு, விவசாயம், கல்வி, கலாச்சாரம் ஆகிய நான்கு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ளன.

my3-india

இந்தியாவிற்கு நான்குநாள் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் புதுடில்லியில் நேற்று திங்கட்கிழமை மதியம் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தினர். இந்தச் சந்திப்பின் இறுதியில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்தியா இலங்கைக்கு இடையில் சிவில்பயன்பாட்டுக்கான அணுசக்தி ஒத்துழைப்பு கட்டமைப்பை ஏற்படுத்துவது, இந்தியாவில் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தின் கிளைகளை இலங்கையில் ஏற்படுத்துவது, விவசாயம்,வர்த்தகம் மற்றும் கலாச்சாரத் துறைகளில் கூட்டுறவை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த சந்திப்பின் முடிவில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிசேனவுடனான சந்திப்பும் பேச்சுவார்த்தையும் சிறப்பான முறையில் நடைபெற்றதாக தெரிவித்தார். சமீபத்தில் நடைபெற்ற இலங்கை ஜனாதிபதி தேர்தலில், மைத்திரிபால சிறிசேன பெற்ற வெற்றிக்கு இந்திய மக்கள் சார்பில் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதாக கூறினார்.

நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தல், அந்நாட்டில் ஜனநாயகம் வலுவாக இருப்பதை பிரதிபலிப்பதாகவும் மோடி குறிப்பிட்டார். மைத்திரிபால சிறிசேனவுக்கு இலங்கை மக்கள் அளித்துள்ள வெற்றியின் மூலம் அவர்கள், ஒன்றுபட்ட, அமைதியான வளர்ச்சியை விரும்புவதை எடுத்துரைத்துள்ளார்கள் என்றும் மோடி தெரிவித்தார்.

இந்தியா, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, தெற்காசிய நாடுகளில் அமைதியை நிலைநாட்டுவது, இருநாடுகளுக்கும் இடையேயான பகுதியில் உள்ள கடற்வழி பாதுக்காப்பு போன்றவை குறித்தும் இந்த சந்திப்பில் விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

“மீனவர்கள் எடுக்கும் முடிவுக்கு இருநாடுகளும் கட்டுப்படுவோம்”

இருநாட்டு மீனவர்கள் விவகாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து பேசியதாகவும் மோடி கூறினார். இருநாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விவகாரம் இது என்பதால், இருநாட்டு மீனவ அமைப்புகள் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்த ஊக்குவிப்போம் என்றார் மோடி. மீனவர்கள் எடுக்கும் முடிவுக்கு, இருநாட்டு அரசாங்கங்களும் செயல்வடிவம் கொடுக்க உறுதிகொண்டுள்ளதாகவும் மோடி குறிப்பிட்டார்.

இறுதியாக தன்னை மைத்திரிபால சிறிசேன இலங்கைக்கு வருமாறு விடுத்துள்ள அழைப்பை ஏற்று எதிர்வரும் மார்ச் மாதம் தான் இலங்கைக்கு செல்லவுள்ளதாகவும் மோடி அறிவித்தார்.

முன்னதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு குடியரசு தலைவர் மாளிகையில் அரசுமுறை மரியாதை செய்யப்பட்டது.

இலங்கையில் புதிய ஜனாதிபதியாக பொறுபேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன, பதவியேற்ற ஒரு மாதக்ககாலத்தில் மேற்கொள்ளும் அவர்து முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம் என்பதால், அவரது இந்த இந்தியப் பயணம் மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இந்தியா வந்த மைத்ரிபாலவை, தமிழகத்தை சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் விமான நிலையம் சென்று வரவேற்றார். நாளை செவ்வாய்க்கிழமை பீகார் மாநிலத்தில் உள்ள கயா செல்லவுள்ள மைத்திரிபால சிறிசேன, புத்தர் ஞானம் பெற்ற பகுதியாக கருதப்படும் மஹாபோதி கோயில் உள்ளிட்ட இடங்களுக்கும் செல்லவிருக்கிறார்.

அதையடுத்து ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி கோயிலுக்கும் சென்று, பின்னர் கொச்சின் விமான நிலையத்திலிருந்து புதன்கிழமை காலை இலங்கை திரும்புகிறார்.

Related Posts