Ad Widget

இந்தியா,இலங்கைக்கு இடையில் பாலம் அமைத்தால் அதை வெடிக்க வைப்பாராம் கம்மன்பில

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் இடம்பெற்ற 12வது இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் கபீர் ஹசீமிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளித்த வேளை, இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் பாலம் அமைப்பது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தப் பாலத்தின் மூலம் இலங்கை மற்றும் இந்தியா இணைக்கப்படும் எனக் கூறிய போதும், உண்மையில் இணைக்கப்படுவது வடக்கு மற்றும் இந்தியாவின் தமிழ்நாடு ஆகியனவே என கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் வேலையற்றோர் தொகை 50 மில்லியன் எனவும், இலங்கையின் மொத்த சனத் தொகை 21 மில்லியன் எனவும் தெரிவித்துள்ள அவர், இதனால் இந்தியாவிலுள்ள வேலையற்றவர்கள் இலங்கைக்கு வருவார்கள் எனவும் கூறியுள்ளார்.

அதேபோல், தமிழ்நாட்டினர் இடைவிடாது வடக்கிற்கு வருவார்கள் எனவும் இதனால் சிங்களவர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு நாட்டை இழக்கும் ஆபத்து ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பல பிரச்சினைகள் உள்ள இந்தப் பாலத்தை நிர்மாணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது எனவும் அவ்வாறு நிர்மாணிப்பதாயின் நிச்சயம் மக்கள் வாக்கெடுப்பு அவசியம் எனவும் கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு இல்லாது பாலம் நிர்மாணிக்கப்படுமாயின் தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் அதனை வெடிக்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts