Ad Widget

இந்தியப் பிரதமரும் காமன்வெல்த் மாநாடும்— சம்பந்தன் கருத்து

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் உச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோஹன் சிங் கலந்துகொள்வது குறித்த சர்ச்சை வலுத்து வரும் நிலையில், இந்தியா இந்த மாநாட்டில் கலந்து கொள்வதால் மட்டும், அது இலங்கையின் மனித உரிமைச் செயல்பாட்டை அங்கீகரிப்பதாக யாரும் கருத முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருக்கிறார்.

sambanthan-tna

இது இலங்கைக்கும் தெரியும், இந்தியாவுக்கும் தெரியும், பிற நாடுகளுக்கும் தெரியும் என்றார் சம்பந்தன்.

காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டில் மன்மோஹன் சிங் கலந்துகொள்வது குறித்து , தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவுவதாகக் கூறப்படுவது குறித்து கருத்து வெளியிட்ட இரா.சம்பந்தன், இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, முடிவெடுக்கவேண்டியது, இந்தியப் பிரதமரும், இந்திய அரசியல் கட்சிகளும், இந்திய மக்களும்தான் , இதில் இந்தியப் பிரதமருக்கு அறிவுரை கூற தன்னால் முடியாது என்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை, இதே நிலைப்பாடுதான், இதற்கு மாறாக யாரும் எதையும் தெரிவிக்கவில்லை என்றார் சம்பந்தன்.

இந்தியா இந்த மாநாட்டில் கலந்துகொள்ளாவிட்டால், அது தமிழ் மக்களுக்கு சாதகமாக இலங்கைப் பிரச்சினையில் செயல்படமுடியாமல் போய்விடும், எனவே இந்த மாநாட்டில் அது கலந்துகொள்வது அவசியம் என்று முன்வைக்கப்படும் வாதம் பற்றிக் கேட்டதற்குப் பதிலளித்த அவர், இந்தியா 1983லிருந்து இலங்கைப் பிரச்சினையில் செயல்பட்டுவருகிறது, இடையே சில காலம் ” சில பிரச்சினைகள் காரணமாக” இந்தியா இலங்கைப் பிரச்சினையில் நேரடியாகத் தலையிடாமல் ஒதுங்கியிருந்தது, இப்போது அது மீண்டும் இப்பிரச்சினையில் கவனம் செலுத்துகிறது, இது தமிழர்களால் வரவேற்கப்படவேண்டிய ஒன்று என்றார்.

இந்தியாவின் செயல்பாட்டைப் பொறுத்தவரை அதை மேலும் பரந்த்பட்ட அளவில் பார்க்கவேண்டும், காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வது என்பது சம்பிரதாயபூர்வமான ஒரு நிகழ்வு. இதில் கலந்துகொண்டாலும்,கலந்து கொள்ளாவிட்டாலும் அதனால் பெரிய பிரச்சினை இல்லை. ஆனால், சர்வதேச அரங்குகளில், குறிப்பாக ஐ.நா மன்ற மனித உரிமைக் கவுன்சில் போன்ற இடங்களில், இந்தியாவின் நிலைப்பாடு தமிழர்களுக்கு சாதகமாகவே இருந்து வந்திருக்கிறது என்றார்.

இது போல வரும் 2014 மார்ச்சில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்திலும் இந்தியா தனது பங்களிப்பை ஆற்றும் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

Related Posts