அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்கும் இணையத்தளங்கள் தொடர்பில் ஆராயப் பாதுகாப்புப் பிரிவின் புலனாய்வு அதிகாரிகளைக் கொண்ட தனியான புலனாய்வுப் பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
செய்தி இணையத்தளங்கள் ஊடாக அரச செயற்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்படுவதைத் தடுக்கவும், அதற்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆராயும் இந்தப் புலனாய்வுப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புலனாய்வுப் பிரிவு பொதுவாக சகல செய்தி இணையத்தளங்களில் வெளியாகும் செய்திகளைப் பகுப்பாய்வு செய்வது, இணையத்தளங்களின் ஊடகவியலாளர்கள், அவற்றின் உரிமையாளர்கள், அந்த இணையத்தளங்கள் பெறும் தொழில்நுட்ப வசதிகள் என்பன தொடர்பாக விசாரணை நடத்த உள்ளது.
குறிப்பிட்ட சில இணையத் தளங்கள் குறித்து விசேட விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த இணையத்தளங்களுக்கு இணையான பெயருள்ள இணையத்தளங்கள் பற்றியும் விசாரிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.