Ad Widget

முன்னர் இருந்தவர்கள் இணக்க அரசியலுக்குக்குக் கொடுத்த வியாக்கியானத்தை நாங்கள் கூற முன்வரவில்லை. -விக்கி

இதுவரை காலமும் முரண்பாட்டு அரசியலில் ஈடுபட்டு வந்த நாங்கள் இனியேனும் இணக்க அரசியலில் ஈடுபட இறைவன் எமக்கு வழி அமைக்க வேண்டும் என வடக்கு முதல்வர் க.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.       வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று யாழ். பொதுநூலகத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,   அமைச்சரின் இன்றைய வடமாகாண விஜயம் எமக்கெல்லாம் ஒரு புதிய உத்தியோகபூர்வ வாழ்க்கைக்கு இடமளிக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.    உத்தியோகபூவமாக எமக்கிருக்கும் வெற்றிடங்கள், பிரச்சனைகள், தடங்கல்கள் தடைகள், நிதிபற்றாமை பற்றி எல்லாம் ஆங்கிலத்தில் ஏற்கனவே கூறியுள்ளேன்.

எமது வடமாகாணம் மற்றைய மாகாணங்களை போலல்லாது பாரிய போர்க்கால இன்னல்களுக்கும் அவலங்களுக்கும் முகம் கொடுத்துள்ள ஒரு மாகாணம். எனவே  எமது தேவைகள் மற்றும்  விசேட தேவைகளைக் கணக்கில் எடுத்து நிவாரணங்களைப் பெற்றுத்தரக் கோரியுள்ளேன்.

அமைச்சர் சமயசார்புள்ளவர். அவருடன் சில சமயசார்பான கூட்டங்களில் கூட நான் அரசியலுக்கு வரமுன் கலந்து கொண்டிருக்கின்றேன்.   அந்த அடிப்படையில் மக்களின் தேவையறிந்து மனிதாபிமான முறையில் எமது கோரிக்கைகளுக்குச் செவிசாய்ப்பார் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. எமது வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருப்பதை உணரக்கூடியதாக இருக்கின்றது.

இதுவரை காலமும் முரண்பாட்டு அரசியலில் ஈடுபட்டு வந்த நாங்கள் இனியேனும் இணக்க அரசியலில் ஈடுபட இறைவன் எமக்கு வழி அமைக்க வேண்டும். இணக்க அரசியல் என்று கூறும் போது இதற்கு முன்னர் இருந்தவர்கள் இணக்க அரசியலுக்குக்குக் கொடுத்த வியாக்கியானத்தை நாங்கள் கூற முன்வரவில்லை.   சரிசம உரித்துக்களையுடைய இரு மக்கள் கூட்டங்கள் என்ற அடிப்படையில் எமக்கிருக்கும் உரிமைகளை உளமாற எடுத்துரைத்து மனிதாபிமான அடிப்படையில் அவற்றை அரசாங்கத்துடன் பேசிப் பெற்றுக் கொள்ளுவதையே நான் இணக்க அரசியல் என்று கூறுகின்றேன்.

இதற்கு இரு தரப்பாரிடமும் கொடுத்தெடுக்கும் அந்த மனோ பக்குவம் இருக்க வேண்டும். தமிழ் மக்கள்  மற்றும்   பெரும்பான்மையினரின் உதவியாலும் பதவிக்கு வந்த ஜனாதிபதி என்ற வகையில் புதிய ஜனாதிபதியின் அரசாங்கம் எமது அரசாங்கம் ஆகும்.     எனவே அரசாங்கத்திடம் நாம் கோரவும் அவற்றை அரசாங்கம் வழங்கவும் இனி எந்தத்தடையும் இருக்கத் தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts