Ad Widget

இடியே விழுந்தாலும் தமிழ் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் – டி.ராஜேந்தர்

சிம்பு பாடிய பீப் சாங் இணையதளம் மூலம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடலில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வரிகள் இருப்பதாகக் கூறி, சிம்பு மீது தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் பேசிய வீடியோ பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் “தமிழ்நாட்டை விட்டு வெளியேறுகிறோம்” என்று அவர் பேசியிருந்தார்.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் யாகத்தை டி.ராஜேந்தர் நடத்தியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், ‘செய்யாத குற்றத்துக்கு சிலர் சதி செய்திருக்கிறார்கள். இந்தப் பிரச்சினையில் சிம்புவுக்கு பக்கபலமாக அவருடைய ரசிகர்கள் நிற்கிறார்கள். எங்களுக்கு பக்கபலமாக நிற்கும் அமைப்புகள், தாய்மார்கள், பெண்கள் கொடுத்த ஆதரவை மறக்க மாட்டேன். சிம்பு எங்கும் தலைமறைவாகவில்லை. சட்டரீதியாக அவர் பிரச்சினைகளை எதிர்கொள்வார்.

என் மகன் தமிழ்நாட்டை விட்டு அல்ல, இந்தியாவை விட்டு ஓடி ஒளிய மாட்டான். எந்த போலீஸ் ஸ்டேஷனில் அவனை ஒப்படைக்க வேண்டும், ஒப்படைக்கிறோம் என்று சொன்ன தமிழச்சி என் மனைவி. எத்தனை இடி விழுந்தாலும், மழை வந்தாலும், வெள்ளம் வந்தாலும் டி.ராஜேந்தர் தமிழ்நாட்டில் தான் இருப்பான். எதிர்த்து நிற்பான், குரல் கொடுப்பான்’ என்றார்.

Related Posts