Ad Widget

இடமாற்ற கொள்கையில் தீர்வின்றேல் பணிப்புறக்கணிப்பு

இடமாற்றக் கொள்கை நிறைவேற்றப்பட்ட பின்னரே இடமாற்ற விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் இல்லாவிடின் மீண்டும் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்வோம் என வடமாகாண பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள விருந்தகம் ஒன்றில் நேற்று (9) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர்கள் இந்த அறிவித்தை விடுத்துள்ளனர்.

வடமாகாண சுகாதார அமைச்சு தமது பணிப்புறக்கணிப்பின் பின்னர், பொது சுகாதார பரிசோதகர்களிடம் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர், தமது கோரிக்கைகள் சிலவற்றை ஏற்றுக்கொண்டு, இடமாற்றத்தினை ரத்துச் செய்துள்ளனர்.

அந்தவகையில், அறிவிக்கப்பட்ட இடமாற்றம் ரத்துச் செய்யப்படுகின்றதென அறிவிக்கப்பட்டதற்கு அமைவாக இன்று செவ்வாய்க்கிழமை முதல் கடமைக்கு திரும்புவதாக வடமாகாண பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வடமாகாணத்தில் உள்ள பொது மக்களின் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு வடமாகாண பொது சுகாதாரப் பரிசோதகர்கள் கடமைக்குத் திரும்பியுள்ளனர்.

கடமைக்குத் திரும்பியுள்ளதை உரிய முறையில் அந்தந்த திணைக்களங்களுக்கு அறிவித்துள்ளதுடன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் எமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் சில முரண்பட்ட கருத்துக்கள் இருக்கின்றன.

இடமாற்றக் கொள்கை நிராகரிக்கப்பட்டால், புதிய இடமாற்றக் கொள்கை தயாரிக்கப்பட்டதன் பின்னரே விண்ணப்பங்கள் கோரப்பட வேண்டும்.

புதிய விண்ணப்ப படிவங்கள் 20 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலை ஏற்றுக்கொள்ளவில்லை.

எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னரான இடமாற்றக்கொள்கை அறிக்கையினை தருமாறு கோரியிருக்கும் அதே சந்தர்ப்பத்தில், 20 ம் திகதி முதல் 30 ம் திகதி வரையான காலப்பகுதியில் பொது சுகாதாரப் பரிசோதர்களின் வருடாந்த இடமாற்றக் கொள்கையினை சீர்செய்யும் முகமாக பொது சுகாதாரப் பரிசோதகர்களுடன் கலந்துரையாடப்படுமென அறிவித்துள்ளார்கள்.

அவ்வாறாயின் 20 ஆம் திகதிக்கு முன்னர் புதிய இடமாற்றக் கொள்கையினை வழங்க வேண்டும். 20 ஆம் திகதிக்கும் 30 ஆம் திகதிக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற வேண்டும். அதன் பின்னரே விண்ணப்ப படிவங்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

சுற்றுநிரூபத்தின் கொள்கை இல்லாமல் எவ்வாறு விண்ணப்பிக்க முடியுமென்றும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். இடமாற்றக்கொள்கை வழங்கப்பட்டதன் பின்னரே, இடமாற்றத்திற்கான விண்ணப்ப படிவங்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டுமென்று பொது சுகாதார பரிசோதர்கள் சங்க தலைவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கொள்கை தீர்மானிக்கப்பட்டதன் பின்னரே பொது சுகாதார பரிசோதகர்களின் விடயங்கள் கொள்கையில் தீர்மானிக்கப்படும். கலந்துரையாடலின் பின்னர் இரண்டு தரப்பும் கொள்கையினை ஏற்றுக்கொண்டு, விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

இடமாற்ற சபை கூடி, அதில் பொதுசுகாதார பரிசோதகர்கள் இருவர் உள்ளடக்கிய பின்னர், தாபனக் கோவையில் சொல்லப்பட்டவைகள் 01.03 நிறைவு செய்யப்படுமென தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

கொள்கைகளை தயாரிப்பதில் முரண்பாடுகள் ஏற்படுமாயின் மீண்டும் பணிப்புறக்கணிப்பு செய்யப்படுமென்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts