யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் வாளுடன் நின்றிருந்த ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (18) இரவு கைது செய்ததாக கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஸ்ரீநிக சஞ்சீவ ஜெயக்கொடி, திங்கட்கிழமை (19) தெரிவித்தார்.
தாவடிப் பகுதியில் இரண்டு நபர்கள், வாள் மற்றும் முள்ளுக்கம்பி சுற்றிய கட்டையுடன் நிற்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அங்கு சென்ற பொலிஸார் இருவரையும் கைது செய்ய முற்பட்ட போது, ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.
ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 13 பேரில் ஒருவரே கைது செய்யப்பட்டவர் ஆவார்.
நபரொருவர் மீது தாக்குதல் நடத்துவதற்காக தாம் அங்கு நின்றிருந்ததாக விசாரணையின் போது கைது செய்யப்பட்டவர் கூறியுள்ளார்.
தப்பியோடியவரை கைது செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.