Ad Widget

ஆளுனர் அலுவலத்தின் பின் கதவு எங்கே உள்ளது?? : சிவாஜிலிங்கம்

வடமாகாண ஆளுனரின் அலுவலகத்தின் பின் கதவு எங்கே இருக்கின்றது என தனக்கு தெரியாது என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் 109ஆவது அமர்வு நேற்றய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

அரசியல் கைதிகள் தொடர்பில் வடமாகாண ஆளுனரை சந்தித்து கதைத்து இருந்தேன். மறுநாள் பத்திரிகை ஒன்றில் சிவாஜிலிங்கம் ஆளுனரை பின் கதவால் சந்தித்தார் என செய்தி வெளியிட்டு இருந்தது.

வடமாகாண ஆளுனரின் அலுவலகத்திற்கு செல்வதற்கு பின் வழியாக வாசல் இருக்கின்றதா ? என்பது எனக்கு தெரியாது.

அதேபோல அண்மையில் மற்றுமொரு ஊடகம் ஒன்றின் ஒரு பக்கத்தில் மேலே ஏமாற்றப்பட்டார் சிவாஜிலிங்கம் டாட் டாட் டாட் என தலையங்கத்துடன் செய்தி. அதன் கீழே மாடிப்படியில் இருந்து இறங்கி வர மறுத்த முதலமைச்சர் என தலையங்கத்துடன் ஒரு செய்தி.

இரு செய்திக்கும் தொடர்பில்லை. ஆனால் பக்கத்தின் தலையங்கத்தை மாத்திரம் வாசித்து செல்பவர்கள் எதோ சிவாஜிலிங்கம் முதலமைச்சருக்கு வெடி குண்டுடன் போய் நின்ற போது , முதலமைச்சர் கீழே வராமல் இருந்தார். அதனால் சிவாஜிலிங்கம் ஏமாற்றப்பட்டார் என விளங்கி கொள்ள கூடும்.

இவ்வாறு மொட்டந்தலைக்கும் முழங்கலுக்கும் முடிச்சு போடுகின்றனர்.

மேலும் தமிழ், சிங்கள ஊடகங்கள் மாத்திரமின்றி நாட்டின் ஜனாதிபதி உட்பட பலரும் வடமாகாண சபையை குறை கூறுகின்றனர். நாட்டில் உள்ள தமிழ் , சிங்கள ஊடகங்கள் மாத்திரமின்றி ஜனாதிபதி மற்றும் சில தமிழ் சிங்கள அரசியல் வாதிகள் என பலரும் வடமாகாண சபை எதுவும் செய்யவில்லை , வினைத்திறன் இல்லை , வந்த பணத்தை செலவழிக்காமல் திருப்பி அனுப்புகின்றார்கள் என விதமான குற்ற சாட்டுக்களை முன் வைக்கின்றார்கள்.

அதன் மூலம் வடமாகாண மக்கள் மத்தியில் அந்த கருத்துக்களை மிகவும் ஆழமாக பதித்து விட்டார்கள். அதற்கு நாம் என்ன செய்ய முடியும் என தெரிவித்தார்.

Related Posts