அரசியல் கைதியான ஆனந்தசுதாகரன் நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே விடுதலை செய்யப்படுவார் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனந்தசுதாகரின் விடுதலையை வலியுறுத்தி 3 லட்சம் கையெழுத்துக்களுடன், வட. மாகாணக் கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் ஜனாதிபதியிடம் மனுவொன்றை கையளித்திருந்தார்.
இந்நிலையில், இந்த மனுவிற்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி செயலகத்தினால், வட. மாகாணக் கல்வி அமைச்சருக்கு இந்த அறிவித்தல் எழுத்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தாயின் இழப்பினாலும், தந்தையின் சிறைவாசத்தினாலும் அனாதரவாக்கப்பட்டுள்ள குழந்தைகளின் பாதுகாப்பான எதிர்காலத்திற்காக அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனை விடுவிக்குமாறு வலியுறுத்தி 3 லட்சம் கையெழுத்துக்களுடனான மனுவை, கிளிநொச்சியில் நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டிருந்த ஜனாதிபதியிடம் சர்வேஸ்வரன் கையளித்திருந்தார். இந்நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.