Ad Widget

ஆணுறுப்பை குறட்டால் நசித்தனர்; பிணத்தையும் அடித்து துன்புறுத்தினர்

“முழந்தாழில் இருத்தி, இரு கைகளையும் கால்களுடன் இணைத்துக் கட்டி, இரண்டு மேசைகளுக்கு இடையில் கட்டித் தூக்கி, உயிரிழக்கும் வரையில் அடித்தே கொன்றார்கள். உயிரிழந்த பின்னரும் அவர்கள் அடிப்பதை நிறுத்தவில்லை” என, யாழ்.மேல் நீதிமன்றில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சுமணன் என்ற இளைஞனை, பொலிஸார் அடித்துக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு தொடரப்பட்ட வழக்கின் சாட்சிகள், யாழ்.மேல் நீதிமன்றில், செவ்வாய்க்கிழமை (21) சாட்சியம் அளித்துள்ளனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் திகதி, சுன்னாகம் பகுதியை சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சுமணன் எனும் இளைஞரைப் பொய்க் குற்றசாட்டின் கீழ் கைது செய்த பொலிஸார், சித்திரவதை செய்து படுகொலை செய்தனர் எனவும் படுகொலை செய்யப்பட்டவரின் உடலை கிளிநொச்சி இரணைமடு குளத்தில் வீசிவிட்டு அவர், தற்கொலை செய்து கொண்டார் என பொலிஸார் கூறியதாகவும், படுகொலையானவரின் நண்பர்கள் சாட்சியமளித்தனர். 

மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையிலேயே கடந்த
2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் திகதி இவ்வாறு சாட்சியம் அளித்தனர்.

அதனையடுத்து, சம்பவம் இடம்பெற்ற காலத்தில், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 8 பொலிஸார் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதில், 7 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளனர். மற்றையவர்  வெளிநாட்டில் வசிப்பதாகத் தெரிவிக்கப்பட்டு, அவருக்கு எதிராக சர்வதேசப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதில், 5 பொலிஸாருக்கு எதிராகக் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றிலும், கொலை குற்றம் சாட்டப்பட்ட அந்த ஐவர் உட்பட 8 பேருக்கு எதிராக சித்திரவதைக் குற்றசாட்டும் சுமத்தப்பட்டு, யாழ்.மேல் நீதிமன்றிலும் வழக்குத் தொடரப்பட்டு வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த வழக்கின், சித்திரவதை தொடர்பான வழக்கு விசாரணை யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில், செவ்வாய்க்கிழமை (21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த வழக்கின் முதலாவது சாட்சியமான இராசதுரை சுரேஷ் என்பவரது சாட்சி பதியப்பட்டது.

இதில் அவர், எம்மை மாவீரர் தினம் கொண்டாடியதாக கூறி சுன்னாகம் பொலிஸார் கைது செய்தனர். பின்னர் எம்மீது திருட்டு குற்றச்சாட்டு சுமத்தினர்.

எம்மையும் எம்முடன் சேர்த்து கைது செய்யப்பட்ட  சுமணனையும் ஒரே அறையில் அடைத்து வைத்தனர். அவ்வேளை, சுமணனை முழங்காலில் இருத்தி கால்களுக்குள் கைகளை விட்டு கட்டி இரண்டு மேசைகளுக்கு இடையில் கட்டித் தொங்கவிட்டு அடித்தார்கள்.

அதன்போது, அவர் நோய் ஒன்றுக்காக தான் மருத்து உட்கொள்பவர் எனவும் தம்மை அடிக்க வேண்டாம் எனவும் கூறினார். ஆனால், அதனை கருத்திலெடுக்காத பொலிஸார் தொடர்ந்து அவரை போட்டு அடித்தார்கள். (அவர் கூறும்போது குறித்த கொலை செய்யப்பட்ட நபர், கைகள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் எப்படி இருந்தார் என்பதை சாட்சி நீதிபதிக்கு தனது உடலால் செய்து காண்பித்திருந்தார்.)

இவ்வாறு அடிக்கும் போது சுமணன் இறந்து விட்டான். அவனது மூக்கால் இரத்தம் வந்துகொண்டிருந்தது. அதன் பின்பும் பொலிஸ் உத்தியோகத்தர்களது வெறித்தனம் அடங்காமல் இறந்த பின்பும் போட்டு அடித்தார்கள்.

எனக்கு, ஆணிகளை காலில் இறுக்கி மின்சார கம்பியால் சுட்டார்கள். எனது ஆணுறுப்பை குறட்டால் நசித்தார்கள். பின்னர், இறந்த சுமணனின் உடலை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நின்ற புதிய ஜீப்பில் ஏற்றிக்கொண்டு போனார்கள். இதன்போது, “உமக்கும் சுமணன் என்பவருக்கும் அடித்துச் சித்திரவதை செய்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் யார், யார் என்பதை அடையாளம் காட்ட முடியுமா?” என, பிரதி மன்றாதிபதி வினாவியபோது, சாட்சி, எதிரி கூண்டில் நின்ற குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களை முறையே அவர்கள் என்ன என்ன செய்தார்கள் என்று சுட்டிக்காட்டி அடையாளம் காட்டினார்.

அத்துடன், தற்போது இதில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் நீதிமன்றில் இல்லை எனவும் கூறினார்.

அவற்றை தொடர்ந்து, அவரது சாட்சியங்களும் எதிரி தரப்பு சட்டத்தரணிகளால் குறுக்கு விசாரனை செய்யப்பட்டது.

அடுத்து, இரண்டாவது சாட்சியமான துரைராசா லோகேஸ்வரனது சாட்சியம் பதிவு செய்யபட்டது.

தாம் கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி தமது புன்னாலைகட்டுவன் சித்தி விநாயகர்  பாடசாலையில் கற்கும் தாய் தந்தையை இழந்த, போரால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு புத்தகப்பைகளை வழங்கினோம்.

இதன்போது அங்கு வந்த ஊரேழு இராணுவ முகாமை சேர்ந்த பிரசாத் என்பவர், நீங்கள் மாவீரர் நிகழ்வா கொண்டாடுகிறீர்கள் எனக் கேட்டார். அதற்கு நாம் இல்லையெனப் பதிலளித்தோம்.

இதன்பின்பு, அன்றைய தினம் இரவு எனது வீட்டுக்கு வந்த சுன்னாகம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சிந்திக்கபண்டார, மயூரன், பிரசாத் ஆகியோர், என்னைத் திருட்டுக் குற்றச்சாட்டு ஒன்றில் கைது செய்தனர்.

அதன் பின்னர், 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி அன்று சிந்திக்க, மயூரன் ஆகிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுமணனைக் கைது செய்து காலை 9க்கும் 10க்கும் இடைப்பட நேரத்தில் கொண்டு வந்திருந்தனர்.

அதன்போது, சுமணனின் நெற்றிப் பகுதியில் இரத்தம் வடிந்துகொண்டிருந்தது. எம்மை தனிநாடு வேண்டுமா என கேட்டு கேட்டு அடித்து, எமக்கு மின்சார கம்பியினால் சூடுவைத்தனர் என சாட்சியம் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து அரச தரப்பு விசாரணையில் உங்களையும் சுமணனையும் கைது செய்த பொலிஸ் உத்தியோகத்தர்களை அடையாளம் காட்ட முடியுமா என வினவியபோது, அவர்களை எதிரி கூண்டில் நின்றவாறு சுட்டு விரலால் அடையாளம் காட்டி அவர்களில் இருவரது பெயர்களையும் சரியாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதன்பின்பு அவரது சாட்சியமானது எதிரி தரப்பு சட்டத்தரணிகளால் குறுக்குவிசாரணை செய்யப்பட்டது. இதன்போது, அவரது மன்றில் வழங்கிய சாட்சியில் இரு விடயங்கள் பொலிஸ் தரப்பினது வாக்குமூலப் பதிவில் வேறுபட்டிருந்த நிலையில் அது மன்றால் அடையாளமிடப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து 6 ஆம் மற்றும் 8 ஆம் சாட்சிகளும் மன்றால் பதிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இவ்வழக்கை நெறிப்படுத்தும் பிரதி மன்றாதிபதி குமார்ரட்ணம், இவ் வழக்கின் குற்றப் பத்திரிகையில் 30ஆம் 31ஆம் 32ஆம் சாட்சிகளாக மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களை அழைப்பதற்கு மன்றின் அனுமதியை கோரியிருந்தார். அத்துடன் இவ் வழக்கின் சாட்சியில் இருந்து 2ஆம் 4ஆம் 5ஆம் சாட்சிகளை நீக்குவதற்கான அனுமதியையும் கோரியிருந்தார்.

இவ்விரு விண்ணப்பங்களுக்கும் மன்று அனுமதியளித்துடன் இவ்வழக்கின் மீதி சாட்சிப்பதிவுகளைப் பதிவு செய்வதற்காக எதிர்வரும் மார்ச் மாதம் 14 ஆம் திகதி வரை ஒத்திவைத்ததுடன், அதுவரை குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களை விளக்கமறியலில் வைக்கவும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டிருந்தார்.

குறித்த வழக்கு விசாரணையில் சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டத்தரணி நாகரட்ணம் நிஷாந்துடன் பிரதி மன்றாதிபதி குமார் ரட்ணம் முன்னிலையாகியிருந்தார்.

எதிரிகள் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகள் குறித்த வழக்கில் பாதிக்கப்பட்ட நபர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொலிஸ் நிலையத்தில் முறையிடவோ அல்லது அவராலோ இவ் வழக்கு தொடுக்கப்படாதுடன் அவர் தற்போது இல்லையென குறிப்பிட்டிருந்தனர்.

அத்துடன் பாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்ற சாட்சி இருந்து, அவரை எதிரித் தரப்பு சட்டத்தரணிகள் குறுக்கு விசாரனை செய்கின்ற போதே, குற்றச் சம்பவத்தின் உண்மை தன்மை மன்றுக்கு தெரியவரும். எனவே இவ் வழக்கில் அவ்வாறானதொரு சந்தர்ப்பம் இல்லையென குறிப்பிட்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து இவ் வழக்கினை நெறிப்படுத்தும் அரச சட்டத்தரணியும் பிரதி மன்றாதிபதியுமான குமார் நாகரட்ணம்,  குறித்த சித்திரவதைக்குள்ளாகி உயிரிழந்த நபரது மரண விசாரணை அறிக்கையில், குறித்த நபரது உடலில் 20க்கு மேற்பட்ட காயங்கள் உள்ளதாகவும், அவர் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அவற்றை அடிப்படையாக கொண்டு இவ் வழக்கை நடாத்தமுடியும் என தெரிவித்தார்.

இந்நிலையில் இவ் விடயம் தொடர்பாக,

குறித்த சித்திரவதை என்பது போர்க்குற்றம் எனவும், அது மனிதவுரிமை மீறல் குற்றமெனவும் குறிப்பிட்ட நீதிபதி, குறித்த சித்திரவதை வழக்கினை பாதிக்கப்பட்டவரது உறவினர் பாதுகாவலர் ஆகியோரது முறைப்பாடுகளின் அடிப்படையிலும் நடாத்தமுடியும் என, உயர்நீதிமன்ற தீர்ப்பொன்றை மேற்கோள்காட்டியதுடன், சித்திரவதைக்கு உள்ளான நபர் உயிருடன் இல்லாவிட்டால் வழக்கை நடாத்த முடியாதென்றால் சித்திரவதைக்கு உள்ளான நபரை கொலை செய்துவிட்டால் வழக்கே இல்லாமல் தப்பித்துவிடலாம் என்ற நிலை ஏற்பட்டுவிடும், என்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி, இவ் வழக்கை தொடர்ந்து நடாத்துவதற்கும், குறித்த எதிரி தரப்பு சட்டத்தரணிகளது ஆட்சேபனை விண்ணப்பத்தையும் நிராகரித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Posts