‘ஆசிரியர்களின் இடமாற்ற விடயங்களில் கடந்த காலங்களில் அரசியல் செல்வாக்கு இருந்ததாகவும் இனிமேல் அவ்வாறு நடக்க இடமளிக்கமாட்டேன்’ என வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா இன்று புதன்கிழமை தெரிவித்தார்.
அச்சுவேலி புனித திரேச மகளிர் கல்லூரியில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான கௌவரவிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ‘நாங்கள் அனைவரும் புதிய பாதைக்கு செல்ல வேண்டுமாயின் மாணவர்களின் கல்வி வளர்ச்சி சிறப்பாக அமையவேண்டும். அதற்கு ஆசிரியர்களின் செயற்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததுடன், இதற்காக ஆசிரியர்கள் கஷ்டப் பிரதேசங்களிலும் சேவை செய்யத் தாயாராக இருக்க வேண்டும்.
அத்துடன், இந்தப் பாடசாலையில் பூரணப்படுத்தப்படாமல் இருக்கும் மேல்மாடிக் கட்டிடத் தொகுதியினை விரைவில் பூரணப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துத் தருவதாகவும்’ அவர் மேலும் தெரிவித்தார்.