Ad Widget

ஆசிரியர்களின் இடமாற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடல்

கஷ்டப் பிரதேசங்களில் 6 வருடத்திற்கு மேல் சேவையாற்றிய 152 ஆசியர்களுக்கு 2014ஆம் ஆண்டு ஜனவரி மாத்ததில் வழங்கப்பட இருந்த இடமாற்றத்தினை ஏப்ரல் மாதத்திற்கு மாற்றியுள்ளமை தொடர்பாக ஆசிரியர்கள் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலனை கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று யாழ். செம்மணி வீதியில் அமைந்துள்ள வடமாகாண கல்வி திணைக்களத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில்,

‘ஏற்கனவே இடமாற்றம் வழங்கப்பட்டதன் அடிப்படையில் தங்கியிருந்த வீடுகளை கைவிட்டும் பிள்ளைகளை வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றுவதற்கு அனுமதி பெற்றுள்ளோம். இந்நிலையில், தற்போது வட மாகாண கல்வி அமைச்சு பொறுப்பற்ற முறையில் இடமாற்றத்தை பிற்போட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால், நாங்கள் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம். இதனால் இடமாற்றத்தினை ஜனவரி மாதத்திற்கே வழங்க வேண்டும்’ என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலனை தொடர்பு கொண்டு கேட்டபோது,

இடமாற்றங்களை வழங்குவதற்கான முடிவுகளை எதிர்வரும் திங்கட்கிழமை தெரிவிப்பதாக கூறினார்.

மேற்படி ஆசிரியர்களுக்கு வடமாகாண கல்வி அமைச்சினால் கடந்த நவம்பர் மாதம் இடமாற்றங்கள் வழங்கப்பட்டு, அதனை உறுதிப்படுத்திய கடிதங்களும் அனுப்பப்பட்டுள்ளன.

இக்கடிதங்களில் ஆசிரியர்களுக்கான பாடசாலைகளும் ஒழுங்கமைக்கப்பட்டு 2014 ஆம் ஆண்டு ஜனவரியில் கடமைகளை பொறுப்பேற்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts