கடந்த வாரம் யாழ்.நகரப் பகுதியில் வைத்து காடைத்தனமான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு யாழ். இந்து ஆரம்ப பாடசாலை ஆசிரியையின் கணவர் ஒருவர் அநியாயமாக உயிரிழந்த சம்பவத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து சங்கத்தின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் விவரம் வருமாறு:-
புதுமணத்த தம்பதிகளாய் குடும்ப வாழ்க்கையில் இணைந்திருந்த சக ஆசிரியர்களுக்கு நடைபெற்றுள்ள கொடூரமான சம்பவமானது, ஜனநாயகம் மலர்ந்துள்ளது என்று அரசாங்கம் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இந்த வேளையில் – மக்கள் நிம்மதியாக வாழமுடியாத சூழலே காணப்படுகின்றது என்பதையே காட்டுகின்றது.
வயதைக் கூட மதிப்பிடாமல் தெருவில் கூடும் காடையர்களின் அட்டகாசங்களால் ஆசிரியர்கள் கூட நையப்புடைக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு, தாக்கப்பட்டு, கொலை செய்யப்படுகின்றார்கள் என்றால் – பொலிஸாரின் நடவடிக்கைகளிலும் சந்தேகம் ஏற்படுகின்றது.
இன்று ரவுடித்தனங்களை அடக்கி யாழ்.குடாநாட்டில் அமைதியான சூழலை ஏற்படுத்த வேண்டும் என முனையும் யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் முயற்சிக்கு – வேண்டுமென்றே முட்டுக்கட்டை போடுவதற்காக சில தீயசக்திகளுடன் இணைந்து பொலிஸாரும் உடந்தையாக செயற்படுகின்றனரா என்னும் சந்தேகம் எழுகின்றது.
இப்படியான காடைத்தனங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நிலவும் போதைப் பழக்கமும் முக்கிய காரணமாகின்றது.
எனவே – இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கும் சம்பத்தப்பட்ட தரப்பு முயலவேண்டும். பொலிஸாருக்கு மேற்படி அசம்பாவிதங்கள் தொடர்பாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றபோதும், அதனை அவர்கள் விரைந்து செயற்படுத்தாத தன்மைகள் பாரதூரமான விளைவை ஏற்படுத்தியிருக்கின்றது. இதனையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
யாராக இருப்பினும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு நீதித்துறை பாரபட்சம் காட்டாமல் தண்டனை வழங்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்வதோடு, பாதிக்கப்பட்ட யாழ்.இந்து ஆரம்பப் பாடசாலையின் ஆசிரியைக்கும், அவரது குடும்பத்தினருக்கும், பாடசாலை சமூகத்துக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம் – எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.