Ad Widget

அவசர தேவைக்காகவே வடக்கில் இராணுவம் நிலைகொண்டுள்ளது: பாதுகாப்பு செயலாளர்

Defence-Secretary-Gotabayaவடக்கில் சிவில் நிர்வாகமே இடம்பெற்று வருகின்றது. தெற்கில் இராணுவ முகாம்கள் இருப்பதைப் போன்றே வடக்கிலும் அவசர தேவைகளுக்காக இராணுவ முகாம்களை அமைத்து இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்’ என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,

இலங்கை இராணுவம் இலங்கையில் நிலைகொள்ளாமல் வெளிநாடுகளில் சென்று முகாம்களை அமைத்து நிலைகொள்ள முடியாது. தெற்கில் போன்றே வடக்கிலும் அவர்கள் தங்கியுள்ளனர்.

வடக்கில் பொலிஸாரே சட்டத்தையும் ஒழுங்கையும் பேணி வருகின்றனர். அங்கு எவ்வாறான பிரச்சினைகள் ஏற்படினும் பொலிஸாரே முன்னின்று தீர்த்து வைக்கின்றனர். இந்நிலையில், அவசர தேவைகளின் பொருட்டே இராணுவத்தினர் செயற்படுவர்.

யுத்தம் காரணமாக வடக்கில் முடக்கப்பட்டிருந்த அபிவிருத்தி மற்றும் பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன. இருப்பினும், யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து அங்கு நிலைமை மாறியுள்ளது.

மக்கள் தங்களது தொழில்களை சுதந்திரமாக செய்கின்றனர். அவர்களின் வாழ்க்கைத்தரம் அதிகரித்து வருகின்றது. யுத்தம் இடம்பெற்ற நாடொன்று இதுவரை செய்யதாத சாதனையைஇலங்கை இந்த குறுகிய காலப்பகுதியில் ஈட்டியுள்ளது. இதுகுறித்து நாம் பெருமையடைய வேண்டும்’ என்றார்.

Related Posts