Ad Widget

அழைப்பு விடுக்காமையால் விசாரணைக்கு செல்லவில்லை

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கைகலப்பில் ஈடுபட்டமை தொடர்பில் உரிய அழைப்புக்கள் கொடுக்கப்படாமையால் விசாரணைக்கு செல்லவில்லையென வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் குறிப்பிட்டார்.

p-kajatheepan

கைகலப்பில் ஈடுபட்டமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 08 உறுப்பினர்களை கடந்த 12ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

வடமாகாண சபை உறுப்பினர்களான பாலச்சந்திரன் கஜதீபன், எம்.கே.சிவாஜிலிங்கம், காரைநகர் பிரதேச சபை தவிசாளர் வே.ஆனைமுகன் ஆகியோருக்கு கடந்த 24ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் வைத்து 12ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு கூறப்பட்டது.

வடமாகாண சபை உறுப்பினர்களான கந்தையா சர்வேஸ்வரன், சந்திரலிங்கம் சுகிர்தன், இமானுவல் ஆர்னோல்ட், வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆகிய ஐந்து உறுப்பினர்களையும் விசாரணைக்கு அழைப்பதாக பொலிஸார் கூறியபோதும் அவர்களுக்கான கடிதங்கள் பொலிஸாரால் அனுப்பப்படவில்லை. இதனால் 08 உறுப்பினர்களும் கடந்த 12ஆம் திகதி விசாரணைக்கு செல்லவில்லை.

கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் திகதி யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் இரு கட்சி உறுப்பினர்களும் காயமடைந்தனர். தமது உறுப்பினர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தாக்கி காயம் ஏற்படுத்தியதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தது.

அந்த முறைப்பாட்டின் பிரகாரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை விசாரணைக்கு வருமாறு பொலிஸார் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts