Ad Widget

அரியாலை இளைஞன் படுகொலை: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட விசேட அதிரடிப்படையின் இரு அதிகாரிகளும், தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, சந்தேகநபர்கள் தொடர்பாக தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மன்றில் தெரிவித்தனர். இதனை கருத்திற்கொண்ட நீதவான், சந்தேகநபர்களை எதிர்வரும் எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அரியாலை – மணியந்தோட்டம் பகுதியில் கடந்த ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி 24 வயதுடைய டொன் பொஸ்கோ டினேசன் என்ற இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்டார். சம்பவம் தொடர்பான விசாரணை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், புலனாய்வுப் பிரிவினரின் தேடுதல் நடவடிக்கையின் போது யாழ். பண்ணை பகுதியிலுள்ள விசேட அதிரடிப்படையின் முகாமில் இருந்து முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும் சில ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

கொலை நடைபெற்ற சந்தர்ப்பத்தில் பதிவாகியிருந்த சீ.சீ.ரீ.வீ. காணொளியில் காணப்பட்ட வாகனங்களே இவை. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே விசேட அதிரடிப்படையின் இரு அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டனர்.

Related Posts