Ad Widget

அரியாலைப் பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு அதிகரிப்பு

அரியாலை பகுதிகளில் சட்டவிரோதமாக மண் அகழ்வோரின் அட்டகாசம் தற்போது அதிகரித்து காணப்படுவதாக, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அரியாலை நாவலடி கட்டட சந்தியில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் வீதியில், கடற்கரைக்கு அருகிலுள்ள தனியார் காணிகளில் இவ்வாறான சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவித்தனர்.

இது தொடர்பில் மக்கள் மேலும் தெரிவிக்கையில்,

இரவு வேளைகளில் உழவு இயந்திரங்களில் வரும் இனந்தெரியாத நபர்கள், கடற்கரை ஓரமாக உள்ள காணிகளில் சட்டவிரோதமாக மண் அகழ்வுகளில் ஈடுபடுகின்றனர். காணிகளின் உரிமையாளர்கள் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். சுமார் 20 ஏக்கர் காணிகளில் இவ்வாறு மண் அகழ்வு இடம்பெறுகின்றது.

கடற்கரை ஓரமான காணிகள் என்பதனால், கடல் நீர் உட்புகக்கூடிய அபாயம் உள்ளமையால், இது தொடர்பில் பலரிடம் முறைப்பாடுகள் செய்துபோதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இப்பகுதி கிராம அலுவலர், பொலிஸாரின் உதவியுடன் கடந்த வருடம் சட்டவிரோத மண் அகழ்வை தடுக்க பெரும் முயற்சிகள் எடுத்து இருந்தார். மண் அகழ்வில் ஈடுபட்டவர்களை, பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள். தப்பி ஓட முயற்சித்தவர்களை பொலிஸார் சுட்டு பிடித்தனர். இவ்வாறான நடவடிக்கையால் சிலகாலம் மண் அகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டு இருந்தது.

கிராம அலுவலர் முயற்சியால் மண் அகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டதனால், சட்டவிரோதமாக மண் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் கடந்த வருடம் கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தினர்.

அத்தாக்குதல் சம்பவத்தின் பின்னர் கிராம அலுவலர் இடம்மாற்றம் கோரி மாற்றலாகி சென்று விட்டார். அதனால் தற்போது மீண்டும் சட்டவிரோத மண் அகழ்வு மேற்கொள்ளப்படுகின்றது.

நாளொன்றுக்கு 10 தொடக்கம் 20 வரையிலான உழவு இயந்திரங்களில் மண் அகழ்ந்து எடுத்து செல்லப்படுகின்றது. சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பில், வடமாகாண சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக அந்த மக்கள் கூறினர்.

Related Posts