Ad Widget

அராலி விளையாட்டுக்கழகம் சம்பியன்

வலிகாமம் கால்பந்தாட்ட லீக்கின் ஏற்பாட்டில் சர்வதேச கால்பந்து போட்டியினையொட்டி லீக்கிற்குட்பட்ட 40 வயதிற்கு மேற்பட்ட கால்பந்தாட்ட அணிகளுக்கிடையில் நடத்தப்பட்ட கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் அராலி விளையாட்டுக்கழக அணி சம்பியனாகியது.

araly-foot-ball

மேற்படி சுற்றுப்போட்டியில் இறுதிப்போட்டி இளவாலை புனித ஹென்றிஸ் கல்லூரி மைதானத்தில் கடந்த சனிக்கிழமை (14) இரவு மின்னொளியில் இடம்பெற்றது.

இறுதிப்போட்டியில் அராலி விளையாட்டுக் கழக அணியினை எதிர்த்து இளவாலை ஹென்றிசியன்ஸ் விளையாட்டுக் கழக அணி மோதியது.

முதல் பாதியாட்டத்தில் அராலி அணியினைச் சேர்ந்த கே.ரவி மற்றும் எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் தலா ஒரு கோல் பெற்றுக்கொடுக்க முதல் பாதியாட்டத்தில் அராலி அணி 2:0 என்ற நிலையில் முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியாட்டத்தில் இளவாலை ஹென்றிஸ் அணிக்கு கிடைத்த தண்டனை உதை வாய்ப்பினை அவ்வணி வீரன் கே.தணேஸ்வரன் கோலாக்கினார். அதே உத்வேகத்துடன், தணேஸ்வரன் தனது அணிக்கான இரண்டாவது கோலினையும் பெற்றுக்கொடுத்தார்.

இதனால் ஆட்டம் விறுவிறுப்பு நிலையினை அடைந்தது. இந்நிலையில் ஆட்டத்தின் இறுதிநேரத்தில் அராலி அணியின் வீரன் என்.சுதர்சன் தனது அணிக்கான வெற்றிக்கோலினை அடிக்க, இறுதியில் 3:2 என்ற கோல் கணக்கில் அராலி அணி வெற்றிபெற்றுச் சம்பியனாகியது.

வெற்றிபெற்ற அணிகளுக்கான வெற்றிக்கேடயங்களை இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியின் அதிபரும் முன்னாள் கால்பந்தாட்ட வீரருமான அருட்தந்தை அ.யேசுதாசன் அடிகளார் வழங்கினார்.

Related Posts