Ad Widget

அரசுக்கு நெருக்கடி கொடுக்க அமெரிக்கா தயக்கம்! நிஷா பிஸ்வால்

“இலங்கையில் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் அரசின் பொறுப்புக்கூறல் பொறிமுறை அமைக்கப்படும்போதுதான் சர்வதேசத்தின் பங்களிப்பு குறித்த அமெரிக்காவின் நிலைப்பாடு அறிவிக்கப்படும். அதனை தற்போது கூறி நெருக்கடிகளை ஏற்படுத்த முடியாது.” இவ்வாறு அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய சந்திப்பில் தெரிவித்தார்.

nisha-biswale-tna

இலங்கைக்கு உத்தியோகபூர்வ வந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால், அமெரிக்காவின் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி ஆகியோர் வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை நேற்றுக் காலை கொழும்பிலுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், ரெலோவின் தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், புளொட்டின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,

“இலங்கையில் ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர் நடைபெற்றுவரும் விடயங்கள் தொடர்பாக இதன்போது பேசப்பட்டது. விசேடமாக அரசியல் சாசனத்தை உருவாக்கும் விடயம், அதற்காக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

இலங்கையில் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த அரசின் பொறுப்புக்கூறல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டு இலங்கை அரசின் இணை அனுசரணையோடு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் விடயங்கள் தொடர்பாக நீண்ட உரையாடலொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இலங்கை அரசு இந்தச் செயற்பாட்டில் வெற்றி காண்பதற்கு சர்வதேச பங்களிப்பும் அமெரிக்காவின் உதவியும் தொடர்ந்து இருக்கும் என்று நிஷா பிஷ்வால், ரொம் மாலினோவ்ஸ்கி ஆகியோர் எம்மிடம் உறுதியளித்துள்ளனர்” – என்றார்.

இதேவேளை, போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலின் தீர்மானத்திற்கு அமைவாக அரசின் பொறுப்புக்கூறல் பொறிமுறை முன்னெடுக்கப்படும்போது சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகள், விசாரணையாளர்கள் பங்கெடுப்பது தொடர்பாக அரசு அண்மைய தினங்கள் உட்பட தொடர்ச்சியாகக் கூறிவரும் கருத்து தொடர்பாக எவ்வாறான நிலைப்பாட்டை அமெரிக்கா கொண்டிருக்கின்றது என சுமந்திரன் எம்.பியிடம் வினவியபோது,

“ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக அரசின் பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசுக்குள்ளிருந்து மாறுபட்ட கருத்துகள் வெளிவருவதை தாம் அவதானித்துள்ளதாக நிஷா பிஷ்வால், ரொம் மாலினோவ்ஸ்கி ஆகியோர் எம்மிடம் தெரிவித்தனர்.

பொறுப்புக்கூறல் தொடர்பாக பொறிமுறையொன்று உருவாக்கப்படும் தருணத்தில் அமெரிக்கா அது தொடர்பாக பேசமுடியும். பொறிமுறை அமைக்கப்படும்போது சர்வதேசத்தின் பங்களிப்புத் தொடர்பில் அமெரிக்கா அறிவிக்கும். அதனை தற்போது கூறி நெருக்கடிகளை ஏற்படுத்த முடியாது.

எவ்வாறாயினும், மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் பொறிமுறையொன்று உருவாக்கப்படுவது அத்தியாவசியமானது என அவர்கள் எம்மிடத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இதேவேளை, அரசியல் கைதிகள் விடுதலை, பொதுமக்களுக்குச் சொந்தமான நிலங்கள் விடுவிப்பு ஆகியவை உட்பட புதிய அரசின் காலத்தில் மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்கான தீர்வை வழங்குவதில் காணப்படும் காலதாமதம் குறித்து தெளிவாக அமெரிக்க அதிகாரிகளிடம் எடுத்துரைத்தோம். அதன்போது இவ்விடயங்களை தாம் அறிந்துள்ளதாகவும், இவ்விடயங்கள் குறித்து அரசுடன் ஏற்கனவே பேச்சு நடத்தி வலியுறுத்தல்களை செய்துள்ளதாகவும், இந்த அழுத்தங்கள் தொடர்ந்து கொடுக்கப்படும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் உறுதியளித்தனர்.

புதிய ஆட்சியாளர்கள் பொதுமக்களுக்குப் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்கள். அவற்றை நிறைவேற்றுவதில் அரசு ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொள்ளுமாயின் அதற்காக துறைசார் நிபுணத்துவ மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்கா தயாராகவுள்ளது எனவும், இது தொடர்பில் இலங்கை அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் கூறினர்” – என்றார் சுமந்திரன் எம்.பி.

Related Posts