Ad Widget

அரசியல் சார் மூதவை உறுப்பினர்களை மாற்றுமாறு பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை

தற்போதுள்ள எமது பல்கலைக்கழக மூதவை உறுப்பினர்களை உடனடியாக மாற்றி அரசியல் சார்பற்ற கல்வியறிவு கொண்ட புத்திஜீவிகளை இந்த அவையிலே நியமிக்க வேண்டும். – இவ்வாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

கடந்த காலங்களில் பல்கலைக்கழக மூதவை உறுப்பினர்கள் அரசியல் தலையீடுகளினாலும், தனிநபர் செல்வாக்குகளினாலும் தகுதியற்ற உறுப்பினர்களை நியமித்தமையை எமது ஒன்றியம் கண்டிக்கின்றது.

எமது பல்கலைக்கழக மூதவையானது பல்கலைக்கழக தனித்துவம், பல்கலைக்கழக அபிவிருத்தி, மாணவர், சமூக நலன், எமது பாரம்பரியம், பண்பாடு, என்பவற்றை உணர்ந்து மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் எமது பல்கலைக்கழகத்தின் அனைத்து செயற்பாடுகளிலும் அரசியல் தலையீடுகளோ, தனிநபர் செல்வாக்குகளோ இடம்பெறக்கூடாது.

அவ்வாறு இடம்பெறும் பட்சத்தில் மாணவ போராட்டங்களின் மூலம் கடும் எதிர்ப்பைத்தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் எமது ஒன்றியம் உறுதியாக தெரிவித்துக்கொள்கின்றது.

ஆகவே உரிய தரப்பினர் இதனைக் கவனத்திற் கொண்டு எமது பல்கலைக்கழகத்தின் தற்போதைய மூதவை உறுப்பினர்களின் பதவியை ரத்துச்செய்து எதுவித அரசியல் சார்பற்ற கல்வியறிவு கொண்ட புத்திஜீவிகளை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு எமது மாணவர் ஒன்றியம் கேட்டுக்கொள்கின்றது. – என்றுள்ளது.

Related Posts