Ad Widget

அரசியலமைப்பையும் மீறி சத்தியப் பிரமாணத்தையும் உதாசீனம் செய்துள்ளார் விமல் – சீ.வீ.கே.

அமைச்சர் விமல் வீரவன்ச அரசியலமைப்பை மீறியுள்ளதுடன் அமைச்சராக பதவியேற்கும் போது முன்னெடுத்த சத்தியப்பிரமாணத்தையும் உதாசீனம் செய்துள்ளதாக வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

வட மாகாண சபையில் நேற்று(வியாழக்கிழமை) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, விமல் வீரவன்ச, தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட பெயர்பலகையை மாற்றியமைத்தமை தொடர்பாக கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “16ஆவது திருத்தச் சட்டத்தில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மொழி அரச கரும மொழியாக இருக்கின்ற போது, அதை அமைச்சர் மீறியிருக்கின்றார்.

அமைச்சராகச் சத்தியப் பிரமாணம் செய்யும் போது, நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் நடந்துகொள்வேன் என சத்தியப்பிரமாணம் செய்த பின்னர், அமைச்சர் அரசியலமைப்பை மீற முடியுமென்றால், சாதாரண மக்கள் மீறலாம் தானே.

சசாதாரண மக்கள் மீறினால் ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு அமைச்சருக்கு அரசியலமைப்பில் உள்ள விடயங்கள் தெரிய வேண்டும். அதைத்தான் மீறுகின்றார் என்பதும் தெரிய வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளுக்கு அமைச்சர் விமல் வீரவன்ச விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, மன்னார் பகுதியில் கைத்தொழில் பேட்டை ஒன்றின் பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்த போது, பிரதான மொழியாக தமிழ் மொழியும், இரண்டாம் மொழியாக சிங்கள மொழியும் அந்தப் பெயர்ப் பலகையில் பொறிக்கப்பட்டிருந்தது.

அதனை அவர் தனது ருவிற்றர் பக்கத்தில் வெளியிட்டிருந்த போது அதில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் பின்னர், அந்தப் பெயர்ப் பலகையில் பிரதான மொழியாக சிங்களத்தையும், இரண்டாம் மொழியாக தமிழழையும் பொறித்து மீண்டும் தனது ருவிற்றர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் அரச கரும மொழியாக தமிழ் மொழி அரசியலமைப்பில் இருக்கின்ற போதிலும், விமல் வீரவன்சவின் இந்த செயற்பாட்டை பல தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

F

Related Posts