Ad Widget

அரசாங்கம் மாறினாலும் நாட்டின் தேசியக் கொள்கை மாறக்கூடாது -ஜனாதிபதி

ஒரு நாட்டில் அரசாங்கங்கள் மாறுகின்ற போது அந்த நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற பொது தேசிய கொள்கைகள் மாற வேண்டியதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பயனுள்ள சரியான திட்டங்கள் ஒரு சில அமைச்சுகளில் செயற்படுத்தப்பட்டாலும் அமைச்சர்கள் மாறுகின்றபோது அக் கொள்கைகளை எடுத்தெறிவது நாட்டின் எதிர்கால பயணத்திற்கு தடையாக அமையுமென ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

தலைசிறந்த தேசிய கொள்கைகளுக்கான இயக்கத்தினால் இலங்கை மன்றத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த அதி சிறந்த தேசிய கொள்கைகளைத் தயாரிப்பதற்கான செயலமர்வின் ஆரம்ப விழாவில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்து கொண்ட போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி தேசிய கொள்கைகளைத் தயாரிக்கும்போது அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும் கவனத்தில் கொண்டு நாட்டின் கல்விமான்கள், புலமைசாலிகள் ஆகியோரின் பங்களிப்புடன் அவற்றைத் தயாரிக்க வேண்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி, அரசாங்கங்கள் மாறினாலும் அக்கொள்கைகளை மாற்றுவதில்லை என்ற பொது உடன்பாட்டை பாராளுமன்றத்தில் ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டினார்.

ஒரு சில அதிகாரிகள் அமைச்சுக்குப் புதிதாக பதவியேற்று வருகின்ற அமைச்சரின் மனதை வெற்றிக்கொள்வதற்காக முன்னாள் அமைச்சர் நடைமுறைப்படுத்திய நல்ல கொள்கைகளில் இருந்த தவறுகளை எடுத்துக்காட்டுவது கவலைக்குரிய விடயமாகும். அத்துடன் அமைச்சர், தனது தனிப்பட்ட கருத்துக்களின் பிரகாரம் அமைச்சையும் கருத்திட்டங்களையும் செயற்படுத்தி ஊழல்கள், மோசடிகள், ஒழுங்கீனங்கள் என்பவற்றை ஒழிப்பதற்கு இத்தகைய பொது உடன்பாட்டுடன் தயாரிக்கப்படுகின்ற தேசிய கொள்கைகளின்மூலம் சந்தர்ப்பம் கிட்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்னும் சில தினங்களில் வரவிருக்கும் பொதுத் தேர்தலில் 30 அமைச்சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவையை அமைப்பதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அந்த அமைச்சுகளுக்காக விஞ்ஞான அடிப்படையில் விடயங்களைத் தயாரித்து அவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக பொது தேசிய கொள்கையொன்றை தயாரிக்குமாறு கல்விமான்களுக்கு அழைப்பு விடுத்தார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், தொழில் நிபுணர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அது தொடர்பாக அக்கறைக் காட்டுகின்ற அனைத்துப் பிரஜைகள் ஆகியோரினது பங்களிப்புடன் இந்த செயலமர்வு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதே வேளையில் அதன் ஆரம்ப விழா வைபவத்தில் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க, பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, முன்னாள் அமைச்சர்களான டியூ. குணசேகர, ரோஹித்த போகொல்லாகம, மனோ கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Posts