Ad Widget

அரசாங்கம் ஜெனிவாவில் வழங்கிய வாக்குறுதியை கடைப்பிடிக்கவில்லை: முதலமைச்சர்

சொந்த காணிகளில் மக்கள் குடியமர்த்தப்படுவார்கள் என அரசாங்கம் அன்று ஜெனிவாவில் வழங்கிய வாக்குறுதியை முறையாக கடைப்பிடிக்கவில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமன்றி காணி அதிகாரங்களும் முழுமையாக மத்திய அரசிடம் காணப்படுவதால் எம்மால் ஒரு காணிகளைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கிளிநொச்சி இரணைதீவு மக்களை நேற்று(திங்கட்கிழமை) சந்தித்த முதலமைச்சர் அவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார்.

மக்கள் அனைவரும் சொந்த இடங்களில் குடியேறியுள்ளதாகவும், தாம் குடியமர்த்துவோம் எனவும் ஜெனிவாவில் அரசு வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் அந்த வாக்குறுதிக்கு அமைய உங்களை குடியமர்த்துவதில் அரசு அக்கறை செலுத்தவில்லை. இதன் காரணமாகவே நீங்கள் இங்கு வந்து குடியேறியுள்ளீர்கள்.

2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதிக்கு பின்னர் இராணுவம் இவ்வாறு மக்களின் காணிகளில் அத்துமீறி வாழ்ந்து வருகின்றனர். ஒரு யுத்தம் நிறைவுபெற்றால், இராணுவம் தமது இடங்கிற்கு சென்றுவிட வேண்டும்.

ஆனால் இங்கு அவ்வாறிலை. நீண்ட காலமாகியும் இராணுவம் மக்கள் காணிகளில் இவ்வாறு வாழ்ந்து வருகின்றனர். காணி அதிகாரம் எமக்கு உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கின்றோம்.

காணி அதிகாரம் இருக்கின்றது ஆனால் எமக்கு முழுமையாக அந்த அதிகாரம் வழங்காமல் மத்திய அரசு அதிகளவான காணி அதிகாரங்களை தம்வசம் வைத்துள்ளது.

இந்த நிலையில் எம்மிடம் உள்ள அதிகாரத்தைக்கொண்டு இவ்வாறு காணிகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலை உள்ளது. நீங்கள் காணிகளை பெற்றுக் கொள்வத தென்னிலங்கையில் உள்ளவர்களே நாட வேண்டிய நிலை உள்ளது.

இருப்பினும் எம்மால் முடியுமான வரை உதவிகளை செய்கின்றோம். வடக்கிற்கு என தமிழ் அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடமும் நாம் இவ்விடயம் தொடர்பில் பேசுவோம் என முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts