Ad Widget

அப்பா – மகனை இயக்க லிங்குசாமி திட்டம்….?

‘அஞ்சான்’ படத்தையடுத்து லிங்குசாமி, கார்த்தி நடிக்க உள்ள ‘எண்ணி ஏழே நாள்’ என்ற படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகலாம் எனத் தெரிகிறது. இதனிடையே லிங்குசாமி தான் இயக்குனரான அறிமுகமான ‘ஆனந்தம்’ படத்தின் நாயகன் மம்முட்டியையும், அவருடைய மகன் துல்கர் சல்மானையும் இயக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம்.

mammuddi-thulkar-son

மம்முட்டி அவ்வப்போது தமிழ்ப் படங்களிலும் நடிப்பார். ஆனால், கடந்த சில வருடங்களாக அவர் எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்கவில்லை. அவருடைய மகன் துல்கர் சல்மான் ‘வாயை மூடிப் பேசவும்’ என்ற படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமானார். ஆனால், அந்தப் படம் தோல்விப் படமாக அமைந்துவிட்டது.

இதனிடையே ‘பெங்களூர் டேய்ஸ்’ படத்தைப் பார்த்து துல்கர் சல்மான் நடிப்பால் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளார் இயக்குனர் லிங்குசாமி. அவரிடம் அண்ணன் தம்பி பற்றிய கதை ஒன்று இருக்கிறதாம். அதில் அண்ணனாக மம்முட்டியையும், தம்பியாக துல்கரையும் நடிக்க வைக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம்.

அடுத்து இயக்க உள்ள படத்தை முடித்து விட்டுத்தான் அப்பா, மகன் இணைந்து நடிக்கும் படத்தை எடுக்க முடியும் என்றும் கூறியுள்ளாராம். லிங்குசாமி இயக்க விருப்பம் தெரிவித்தால் கண்டிப்பாக அப்பா – மகன் இருவருமே சம்மதிக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் மம்முட்டி நடித்த தமிழ்ப் படங்களில் ‘ஆனந்தம்’ படம் ஒரு அழகான அண்ணன் தம்பிகள் பாசக் கதையாக அமைந்து நல்லதொரு வெற்றியைப் பெற்றது.

அதே சமயம் லிங்குசாமி கமர்ஷியலாகவும் படத்தை இயக்குபவர் என்பதால் மம்முட்டியும், துல்கரும் நடிக்கும் படத்தை விரைவில் எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.

Related Posts