Ad Widget

அப்பா சில படங்களில் கொஞ்சம் ஓவர் தான்: ஐஸ்வர்யா

‘தலைவா’ என்று ரசிகர்களால் கடவுள் போல் போற்றப்படும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் சிறந்த விமர்சகர் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தானாம்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ், முதன் முறையாக தனது வாழ்வில் தன் வாழ்வில் நடந்த, சுவையான, சோகமான மற்றும் பாடம் கற்ற நிகழ்வுகளை புத்தகமாக எழுதியுள்ளார். ‘ஸ்டாண்டிங் ஆன் அன் ஆப்பிள் பாக்ஸ்’ எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதியுள்ள அந்த புத்தகத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளான (டிசம்பர் 12) அன்று உலகப் புகழ்பெற்ற ‘ஹார்ப்பர்காலின்ஸ்’ பதிப்பகத்தின் இந்தியப் பிரிவு வாங்கி வெளியிட்டது.

மும்பையில் நடைபெற்ற இப்புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய ஐஸ்வர்யா சில சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துக்கொண்டுள்ளார். அப்போது அவர் பேசுகையில், அப்பா (சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்) நடிக்கும் படங்களை முதலில் விமர்சனம் செய்வது நான் தான், கொஞ்சம் ஓவராக இருந்தால் அதனை கோவமாக இல்லாமல் சாதரணமாக கூறிவிடுவேன் என்று கூறியுள்ளார்.

இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான ஒரு ஸ்டாரின் மகளாக இருப்பதின் நன்மை, தீமை, சகிக்க முடியாத விஷயங்களை தனது புத்தகத்தில் எழுதியுள்ள ஐஸ்வர்யா இந்த புத்தகத்தை என்னை போன்று உள்ள உலக ஸ்டார்களின் குழந்தைகளுக்காக சமர்ப்பிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

மேலும், தனது கணவர் தனுஷ் மற்றும் தந்தை ரஜினிக்கும் இடையே இருக்கும் உறவு குறித்து பேசும்போது, தனிப்பட்ட முறையிலும், தொழில்முறையிலும் இருவரும் ஒருவரையொருவர் புகழ்வதுண்டு. கணவர் தனுஷ் சிறுவயதிலிருந்தே சூப்பர்ஸ்டாரின் தீவிர ரசிகன் என்பதால், அப்பாவின் ஒவ்வொரு செயலையும் ரசிப்பார். அதேபோல், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் என்ற போர்வையில் இல்லாமல் சுயமாக தனுஷ் தனது திறமையால் உயர்ந்ததைக் கண்டு அப்பாவும் நெகிழ்வார் என்று ஐஸ்வர்யா கூறியுள்ளார்.

இரண்டு மகன்களுக்கு தாய் என்ற வகையில், அவர்களை சூப்பர்ஸ்டாரின் பேரக் குழந்தைகள், தனுஷின் மகன்கள் என்ற போர்வையில் வளர்க்க விரும்பவில்லை. அவர்கள் விரும்பினால் திரைத்துறையில் சாதிக்கட்டும். எனது குழந்தைகள் தாத்தா மற்றும் அப்பா நடித்த படங்களை விட மற்ற நடிகர்களின் படங்களை பார்க்கத்தான் ஆசைப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

வெளியுலகத்தில் எங்கு சென்றாலும் தன்னைத் பின்தொடரும் கேமராக்களும், தன்னையே கண்காணிக்கும் ஏனையவர்களின் மத்தியிலும் தனக்கான சுய அடையாளத்தை எப்படி மீட்டு எடுத்தார் என்பதையும் இதில் ஐஸ்வர்யா கூறியிருக்கிறார். திரைப்பட இயக்குனர், சிறந்த பரதநாட்டிய கலைஞர், தயாரிப்பாளர் என்பதுடன் தற்போது எழுத்தாளராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார் ஐஸ்வர்யா.

இந்த புத்தகத்தில், தந்தை ரஜினியிடம் பெற்ற அனுபவங்களையும், தன்னுடைய நினைவுகளையும் எதிர்பாராமல் நடைபெற்ற சம்பவங்களின் துளிகளையும் ஐஸ்வர்யா குறிப்பிட்டுள்ளார். ஒரு சூப்பர் ஸ்டாரின் மகளாக இருந்தும்,பெண்ணானவள் வீட்டிலும், சமூகத்திலும், எம்மாதிரியான விஷயங்களுக்கு எப்படி முகம் கொடுக்கிறாள் என்பதை நெஞ்சை நெகிழச் செய்யும் வகையிலும், நேர்மையான முறையிலும் இதில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

Related Posts