Ad Widget

அன்ரன் பாலசிங்கம் எனக்குத் தெரியப்படுத்திய இரகசிய விடயங்களை வெளியிடுவேன்! – வித்தியாதரன்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகப் போராளிகள் கட்சி புலிமுகச் சிலந்தியைத் தமது சின்னமாகத் தெரிவு செய்திருப்பதாக, அதன் தலைமை வேட்பாளர் ந.வித்தியாதரன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகப் போராளிகள் கட்சி யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 10 வேட்பாளர்களை இந்த தேர்தலில் சுயேச்சைக் குழுவொன்றில் நிறுத்தியிருக்கிறது.

யாழ். மாவட்டச் செயலகத்தில் சுயேச்சைக் குழுக்களுக்கு பல்வேறு சின்னங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த சுயேச்சைக் குழு தமது சின்னமாக புலிமுகச் சிலந்தியைத் தெரிவு செய்துள்ளது.

தாம் சிலந்தி சின்னத்தை தெரிவு செய்திருப்பதாகவும், அது புலிமுகம் கொண்டதாக இருப்பதால், தமது கட்சிக்கு நல்லது என்றும் சுயேச்சைக் குழுவின் முதன்மை வேட்பாளர் ந.வித்தியாதரன் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

எதற்காக தேர்தலில் போட்டியிடுகிறீர்கள் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் அவரிடம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள வித்தியாதரன்,

“அன்ரன் பாலசிங்கம் உள்ளிட்ட பல்வேறு விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்கு நெருக்கமானவராக நான் இருந்திருக்கிறேன்.

அதேவேளை, உதயன் ஆசிரியராகவும் இருந்திருக்கிறேன். ஏனைய பலருக்கும் தெரியாத பல உண்மைகள் எனக்குத் தெரியும்.

விடுதலைப் புலிகளுக்கும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் தூதுவராகச் செயற்பட்டிருக்கிறேன்.

விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கம் மரணப் படுக்கையில் இருந்த போது – கடைசியாக இரகசிய விடயங்களை எனக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.

இந்த இரகசியங்களை விரைவில் வெளியிடவுள்ள புதிய நூல் ஒன்றின் மூலம் வெளிப்படுத்தவிருக்கிறேன்.” என்று கூறியிருக்கிறார்.

Related Posts