கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட பலர் அனுராதபுர பிரதேசத்தில் இரகசியமாக இயங்கும் வதைமுகாமொன்றில் இருப்பதாக கையளிக்கப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டோரைக் கண்டறியும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த இரகசிய முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு மோசமான முறையில் சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதாக குறித்த சங்கத்தின் வடக்குக் கிழக்கு மாகாணத்துக்கான தலைவர் நாகேந்திரன் ஆஷா கொழும்பில் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
காணாமல்போனோரின் உறவினர்கள் மற்றும் காணாமல் போனோரின் உரிமைகளுக்காக போராடிவரும் பொது அமைப்புக்கள் இணைந்து நேற்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த நிலையிலேயே ஆஷா இந்த அதிர்ச்சித் தகவல்களைத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், தமது உறவுகளைக் கடத்திய கடற்படையினரை ஆதாரத்துடன் நாம் அடையாளப்படுத்தியும்கூட அரசாங்கமோ, பாதுகாப்பு அமைச்சோ இதுவரையும் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
தாம் கேள்வியுற்ற இந்த இரகசிய முகாம் தொடர்பில் முறையிடுவதால் எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை என்பதாலேயே ஊடகங்களுக்கு இந்தத் தகவலைத் தெரிவிப்பதாக ஆஷா மேலும் தெரிவித்துள்ளார்.