யாழ்ப்பாணம், அனலைதீவு பிரதேசத்தில் கடற்படை வீரரைத் தாக்கியதாகக் கூறி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு சந்தேகநபர்களில் மூவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த வழக்கு, நேற்று (புதன்கிழமை) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றநிலையில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கடந்த 9ஆம் திகதி யாழ்ப்பாணம், அனலைதீவு பிரதேசத்தில் கடற்படை வீரரைத் தாக்கியதாகத் தெரிவித்து அப்பிரதேசத்தை, கடற்படையினர் சுற்றிவளைத்து அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த நால்வரைக் கைதுசெய்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் கடந்த 10ஆம் திகதி யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த தாக்குதல் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மூவர் சார்பில் சட்டத்தரணி மணிவண்ணன் இன்று ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜராகி குறித்த மூவருக்கும் தாக்குதல் சம்பவத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனத் தெரிவித்து பிணை விண்ணப்பத்தினை முன்வைத்தார்.
இந்நிலையில், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் குறித்த மூன்று சந்தேகநபர்களுக்கும் பிணை வழங்கியுள்ளது.