வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் ஆதரவாளர்களான பண்ணாகத்தினைச் சேர்ந்த இரு இளைஞர்கள் வட்டுக்கோட்டைப் பொலிஸாரினால் இன்று திங்கட்கிழமை (14) கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பண்ணாகத்தில் அமைந்துள்ள அனந்தியின் அலுவலகத்திலிருந்த மேற்படி இரு இளைஞர்களும், குறித்த அலுவலகத்துக்கு சிவில் உடையில் வந்த பொலிஸாரின் கடமையைச் செய்யவிடவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்துள்ளனர்.
எனினும், சிவில் உடையில் வந்தவர்கள் பொலிஸார் தான் என்பதை தங்களால் உறுதிப்படுத்த முடியாதிருந்ததாக கைதான இரு இளைஞர்களும் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, விசாரணைகளை முடித்த பொலிஸார் அவ்விருவரையும் விடுவித்துள்ளனர் என்று பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.