அதிகாரிகள் இடமாற்றம் குறித்து வடக்கு ஆளுனர் செயலகம் அறிக்கை

வட மாகாண சபையின் கீழ் கடமையாற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகளின் இடமாற்றங்கள் பிற்போடப்பட்ட விடயம் தொடர்பில் வடக்கு ஆளுனர் செயலகத்தினால் அறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

ஆளுனர் செயலகத்தின் ஊடக அறிக்கை – 04.04.2015

வடக்கு மாகாண சபையின் கீழ் கடமையாற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகளின் இடமாற்றங்கள் பிற்போடப்பட்டமை பற்றி ஊகத்தின் அடிப்படையிலான தவறான செய்திக் கட்டுரை அல்லது செய்தி அறிக்கையிடல் வெவ்வேறு ஊடகங்களில் வெளியாகியுள்ளமை வட மாகாண ஆளுநர் செயலகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

போதியளவு அனைத்து அம்சங்களையும் ஆலோசிக்காமலும் கருத்திலெடுக்காமலும் இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதனால், இவ்விடயங்கள் தொடர்பான மீளாய்விற்கும் ஆலோசனைக்கும் கால அவகாசம் கொடுக்கும் வகையில் மேற்சொன்ன இடமாற்றங்கள் ஆளுனரினால் பிற்போடப்படடுள்ளன.

வடக்கு மாகாண சபையின் பேரவைத் தலைவர் உட்பட சம்பந்தப்பட்ட அக்கறையுள்ள தரப்பினரால் மேற்படி இடமாற்றங்கள் தொடர்பில் கரிசனைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை வாரியத்தினால் சம்பந்தப்பட்ட தரப்புகளின் மத்தியில் மீளாய்வும் ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டு இணக்கம் காணப்படும் சிபாரிசுகளுக்கு அமைவாக, சுமுகமான சேவைச் சூழலை இலகுபடுத்தும் வகையில் அவசியமான இடமாற்றங்கள் அமுலுக்கு வரும்.

அவ்வாறான நியமனங்களை மேற்கொள்வதற்கு சட்டபூர்வமான ஆணை வழங்கப்பட்ட அதிகாரத்தரப்பாக மாகாண ஆளுநர் விளங்கும்போது, இந்த சம்பவம் தொடர்பில் “வடக்கு மாகாண சபை விவகாரங்களில், சட்டத்திற்கு முரணாக ஆளுனர் தலையிடுகிறார்” என்ற ரீதியில் கூறமுற்படுவது முற்றிலும் ஆதாரமற்றதும் தவறான திசைதிருப்பலும் ஆகும்.

இந்த இடமாற்ற விடயத்தில் ஆளுனருடைய முயற்சியானது வட மாகாண சபையில் பரஸ்பரம் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் தீர்மானங்களை உருவாக்குவதற்கு அனுசரணை வழங்கும் நோக்கத்தை உண்மையில் கொண்டதாகும்.

Related Posts