யாழ்ப்பாணம் திருநெல்வேலி பூதவராயர் வீதி பகுதியில் வைத்து நபரொருவர் மீது கடந்த திங்கட்கிழமை(02) அசிட் தாக்குதல் மேற்கொண்ட வயோதிபரை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார், செவ்வாய்க்கிழமை(03) உத்தரவிட்டார்.
இந்த அசிட் தாக்குதலில் திருநெல்வேலி பகுதியை சேர்ந்த பொன்னுத்துரை கமலநாதன்(வயது 45) என்பவர் படுகாயமடைந்த யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அசிட் தாக்குதலுக்குள்ளானவர், குறித்த வயோபதிபரிடமிருந்து 1 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 7 ½ பவுண் நகை ஆகியவற்றை கைமாற்றாக வாங்கிக்கொண்டு திரும்பவும் அதனைக் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார்.
தன்னை ஏமாற்றியவர், தனது வீட்டுக்கு முன்னால் வாகனமொன்றில் இருப்பதை கண்ட வயோதிபர் வீட்டிலிருந்த அசிட் போத்தலை எடுத்து வந்து வீசியுள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார் சந்தேகநபரான வயோதிபரை கைது செய்து நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினார்கள். அதன்போது நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.