Ad Widget

அங்கஜன் கோரிக்கை நிறைவேற்றம்! அரச உத்தியோகத்தர்களுக்கு இடர் காலக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானம்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்ச நிலைமைக்கு மத்தியில் செயலாற்றி வரும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடர் காலக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபை அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (06) அன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் விவசாய அபிவிருத்தி உத்தியோகர்களுக்கும் விசேட கொடுப்பனவொன்றை வழங்க அமைச்சர் சமல் ராஜபக்ஸவும் நானும் அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்தோம்,அந்த அமைச்சரவைப் பத்திரத்திற்கமைய ஒரு கிராம சேவகருக்கு ஒரு பிரிவிற்கு 450 ரூபா கொடுப்பனவும் அதற்கு மேலதிகமான பிரிவிலும் அவர் கடமையாற்றுவதாக இருப்பின் 150 ரூபா மேலதிக கொடுப்பனவையும் வழங்க தீர்மானித்துள்ளோம், அத்துடன் அவர்களுக்கு தொலைபேசிக்கான கொடுப்பனவாக 1000 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளது,அத்துடன் ஒரு கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றுவதற்கான கொடுப்பனவாக 1200 ரூபாவையும் செலுத்த நாம் தீர்மானித்தோம்,இந்தக் கொடுப்பனவுகள் இந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு தமது கடமைகளுக்கு பாரிய உதவியாக அமையும் என நாம் நினைக்கின்றோம்,இந்தக் கொடுப்பனவுகள் மூன்று மாதத்திற்கு வழங்கப்படவுள்ளன, அத்துடன் நிலைமையைக் கருதி இது நீடிக்கப்படும் சாத்தியமும் காணப்படுகின்றது.

இந்த நிலையில் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட கடுமையாக உழைக்கும் அனைத்து அரச ஊழியர்களுக்கும் கொடுப்பனவொன்றை வழங்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபை அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் அவர்களிடம் கோரிக்கைக் கடிதமொன்றை கையளித்திருந்தார்.

அத்துடன் இவ்வாறான கொடுப்பனவினை பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கும் வழங்குவது குறித்தும் கரிசனை செலுத்துமாறு அங்கஜன் இராமநாதன் இக் கடிதம் மூலமாக கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனடிப்படையில் பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபை அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts