அகதிகளை நாடு கடத்துவது தொடர்பாக சுவிட்சர்லாந்து சிறீலங்காவுடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) இருதரப்பு உடன்பாடு ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.
சுவிற்சர்லாந்தின் நீதியமைச்சர் சிமோனேட்டா சொம்மாறுகாவுக்கும், சிறிலங்காவின் உள்விவகார அமைச்சர் எஸ்.பி.நாவின்னவுக்கும் இடையில் இந்த உடன்பாடு நேற்று கையெழுத்திடப்பட்டது.
நாடு கடத்தும் நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பான உடன்பாட்டிலேயே கையெழுத்திடப்பட்டுள்ளது.
அத்துடன் தாயகம் திருப்பி அனுப்பப்படும் இலங்கை அகதிகள் சித்திரவதைக்குட்படுவார்கள் என்ற கருத்தை சுவிட்சர்லாந்தின் நீதியமைச்சர் நிராகரித்துள்ளார்.
முன்பு போலவும், இந்த உடன்பாட்டுக்கமையவும் ஒவ்வொருத்தரும் பரிசீலிக்கப்படுவார்கள். இதன்படி யாருக்கு உதவி தேவை, யாருக்கு அடைக்கலம் அளிக்க வேண்டும், நாடு திருப்பி அனுப்புவது சாத்தியமா, நியாயமானதா என்று எல்லாமே, ஆராயப்படும். அங்கு எந்த மாற்றமும் இடம்பெறாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுவிற்சர்லாந்தில் 50ஆயிரம் தமிழர்கள் அடைக்கலம் தேடியுள்ளனர். இவர்களின் பல ஆயிரக்கணக்கானோர் இன்னமும் அகதிகள் என்ற நிலையிலேயே உள்ளனர் என்பதும், நாடு திருப்பி அனுப்பப்படும் சூழலில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.