யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவைக்கு அரசியல் ரீதியாக உள்வாங்கப்பட்ட வெளிவாரி உறுப்பினர்கள் தாமாகவே பதவி விலகவேண்டும் எனக்கோரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரால் மேற்கொள்ளப்பட்ட அடையாள வேலை நிறுத்தப்போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தலைவர் சி.தங்கராசா தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை(30) மதியம் 12 மணி முதல் சனிக்கிழமை(31) மதியம் 12 மணி வரை மேற்கொள்ளப்படவிருந்த அடையாள வேலை நிறுத்தப்போராட்டம் சனிக்கிழமை(31) காலை 10 மணியுடன் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தலைவர் சி.தங்கராசா கருத்துத் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவைக்கு அரசியல் தலையீட்டால் உள்வாங்கப்பட்ட வெளிவாரி உறுப்பினர்கள் தாமாகவே வெளியேறவேண்டும் எனக்கூறி பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், மாணவர் ஒன்றியம் ஆகியன பலதடவைகள் கோரிக்கை விடுத்திருந்தன. ஆனால் இன்றுவரை அவர்கள் பதவி விலகியதாக தெரியவில்லை.
சனிக்கிழமை(31) பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த பேரவைக் கூட்டத்தில் அவர்கள் கலந்துகொள்வதை தடுப்பதற்காக வெள்ளிக்கிழமை(30) மதியம் 12 மணி தொடக்கம் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோம்.
எனினும் பேரவைக்கூட்டம் பிற்போடப்பட்டுள்ளமையால் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளோம் என அவர் தெரிவித்தார்.
27 அங்கத்தவர்களைக் கொண்ட பேரவையில் 14 வெளிவாரி உறுப்பினர்கள், உள்ளூர் அமைச்சர் ஒருவரின் சிபாரிசு மூலம் தெரிவு செய்யப்பட்டு, பேரவை உறுப்பினர்களின் கூட்டம் அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்று அங்கு எடுக்கப்படும் தீர்மானமே பல்கலைக்கழகத்தில் நடைமுறைப்படுத்துவதால் முறைகேடுகள், பாரபட்சம் என்பன காட்டப்படுவதாகக்கூறியே வெளிவாரி உறுப்பினர்களை வெளியேறுமாறு ஊழியர் சங்கம் போராட்டம் நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.