வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களை சுட்டுக்கொன்று எரித்தது இராணுவம்!

“இறுதிப்போரில் முள்ளிவாய்க்கால் கிழக்கில் வெள்ளைக்கொடியுடன் வந்து படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் உடனே சுட்டுக்கொல்லப்பட்டு எரிக்கப்பட்டார்கள். சரணடைந்தவர்களில் ஏனையோருக்கு என்ன நடந்தது என்று தெரியாது. இது தொடர்பில் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட விசாரணைக்குழு விசாரணை நடத்த வேண்டும்.” இவ்வாறு நல்லிணக்க செயலணி முன் கதறியழுது வலியுறுத்தியுள்ளனர் இறுதிப்போரில் உயிர்பிழைத்த வடக்கு மக்கள்.

nadesan pulithevan87r

போர்க்குற்ற விசாரணைகளை எவ்வாறு முன்னெடுப்பது மற்றும் காணமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை அமைப்பது என்பன தொடர்பில் நல்லிணக்க செயலணியால் வடக்கில் மக்களிடம் கருத்தறியப்பட்டு வருகின்றது. இதன்போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:-

“காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை இழுத்தடிக்கப்படுகின்றது. அரசு மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கண்டுபிடித்துத் தருவோம் என்று கூறிக்கொண்டிருப்பதை ஏமாற்றும் செயலாகவே நாம் கருதுகின்றோம்.

இந்த விடயங்கள் தொடர்பில் சர்வதேசத்தால் அங்கீகரிக் கப்பட்ட குழு விசாரணை நடத்தவேண்டும். இது தொடர்பில் இராணுவத்தினர் யாராவது தகவல் தெரிவிக்க முன்வந்தால் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கவேண் டும். தகவல்களை மறைப்பவர்களுக்குத் தண்டனை வழங்கவேண்டும்.

இதேவேளை, இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டவர்கள், இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் பற்றிய எந்தத் தகவல்களும் வெளியிடப்படவில்லை. இந்த நிலைமையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அரசு கூறுகின்றது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு இவ்வாறு கூறுவதே பெரும் குற்றம். இதை எப்படி நல்லாட்சி என்பது?

வடக்கில் பலர் இராணுவத்தால் கொல்லப்பட்டனர். இராணுவம் சுட்டுக் கொன்றது உண்மை. விரும்பியோ, விரும்பாமலோ இந்த அரசு குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை வழங்காது. அதனால் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட விசாரணைக் குழு விசாரணை நடத்த வேண்டும்” – என்றனர்.

Related Posts