கொற்றாவத்தை சிவானந்தா விளையாட்டுக்கழகத்தில் கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி இடம்பெற்ற கைகலப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட 23பேரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கராசா கணேசராசா வெள்ளிக்கிழமை (03) உத்தரவிட்டார்.
மேற்படி சம்பவத்தில் அறுவர் படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். கொற்றாவத்தை சிவானந்தா விளையாட்டுக்கழகத்தின் கீழ் 3 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த இளைஞர்கள் விளையாடி வருகின்றனர்.
கொற்றாவத்தை சிவானந்தா என்ற பெயரில் இயங்கிய விளையாட்டுக்கழத்தை அல்வாய் மேற்கு சிவானந்தா விளையாட்டுக்கழகம் என சிலர் மாற்றினர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சிலர் பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்த போது, அனைவரும் சமரசமாக சிவானந்தா விளையாட்டுக்கழகத்தின் கீழ் விளையாடவேண்டும் என நீதிமன்றத்தால் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் பெயர் மாற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு மற்றைய தரப்பினருக்கும் இடையில் கடந்த ஜூன் 25ஆம் திகதி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை பொலிஸார் கைகலப்பில் ஈடுபட்ட 23பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.