வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் குறித்து ரி.ஐ.டி தீவிர விசாரணை: பொலிஸ் அத்தியட்சகர்

kamal_epdpநெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியன் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளவர்களில் வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுக்கப்படுகின்றன என்று யாழ். பொலிஸ் அத்தியட்சகர் தமயந்த விஜயசிறி தெரிவித்தார்.

பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு (ரி.ஐ.டி) மற்றும் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு ஆகிய இணைந்தே தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக யாழ். பொலிஸ் அத்தியட்சர் (எஸ்.பி.) தமயந்த விஜயசிறி தெரிவித்தார்.

யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு பொலிஸ் அத்தியட்சர் மேலும் தெரிவிக்கையில்,

பிரதேச சபை தலைவரின் கொலை தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டனர்.

அதன் பின்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படுத்தினர். நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சந்தேகநபர்கள் மூவரும் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.