குடும்ப பிரச்சினை காரணமாக யாழ்.மேயருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கிளிநொச்சியில் மக்கள் சந்திப்பொன்றில் ஈடுபட்டிருந்தார்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள செருக்கன் பிரதேச மக்களுடன் குறித்த சந்திப்பு நேற்று பகல் 1 மணியளவில் இடம்பெற்றது.
செருக்கன் பகுதியில் வாழும் மக்களின் அடிப்படை தேவைகள், குடிநீர் பிரச்சினை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக அவர் இதன்போது கேட்டறிந்துகொண்டார்.
குறித்த சந்திப்பின் நடுவில் அக்கிராமத்தில் உள்ள செருக்கன் குளத்தினை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் யாழ். மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்ட், சயந்தன் ஆகியோருக்கு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் உயிரச்சுறுத்தல் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “யாழ். மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்டின் மனைவியின் தொலைபேசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த அச்சுறுத்தல் தொடர்பில் சிலரை அவர்கள் சாடுகின்றனர்.
அவர்மீது அச்சுறுத்தல் விடுப்பதாக இருப்பின் அவரது மனைவிக்கு அழைப்பு விடுக்கப்படவேண்டியதில்லை. நேரடியாக அவருக்கே அச்சுறுத்தல் விடுக்கப்படும். எனவே அது அவர்களின் குடும்ப பிரச்சினையாக இருக்கலாம்.
ஆனாலும் உயிர் அச்சுறுத்தலிற்கு உள்ளான அவர்கள் பாதுகாப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். எஸ்.ரி.எப் பாதுகாப்பு பெறுவதனால் அவர்கள் மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை ஏற்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.