யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குப்பிளான் தெற்கில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
அதன் முதற்கட்டமாக இன்று (புதன்கிழமை) காலை பதினையாயிரம் ரூபாயினை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் அரச அதிபர் வழங்கினார்.
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகம் தலைமையில் உடுவில் பிரதேச செயலாளர் ஜெயக்காந், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் காணி முரளிதரன், வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் அபராசுதன், கிராம சேவகர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் அடங்கிய குழுவினர் மின்னல் தாக்கம் இடம்பெற்ற இடத்தினைச் சென்று பார்வையிட்டனர். அதனைத்தொடர்ந்து குறித்த குழுவினர் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கும் சென்றனர்.
இதன்போது சமுர்த்தி பாதுகாப்பு நிதியத்தின் மரணத்திற்கான கொடுப்பனவு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கொடுப்பனவு ரூபாய் ஒரு இலட்சத்தில் ஒரு பகுதி வழங்கப்பட்டது.
மேலும் உயிரிழந்தவர்களில் ஒருவருக்கான வீட்டுத்திட்டத்தினை முன்னுரிமை அடிப்படையில் வழங்கவுமாறும் அரச அதிபர் பணித்துள்ளார்.
அப்பகுதிளில் அடிக்கடி மின்னல் தாக்கம் நிகழ்வதற்கான காரணம் குறித்து ஆராய்வதோடு அப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களில் பொருத்தப்பட்டுள்ள இடிதாங்கிகள் இயங்கு நிலையில் உள்ளதா என்பது குறித்தும் ஆராயும்படி அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இடிதாங்கிகள் உரிய தரத்தில் உரிய முறைப்படி பொருத்தப்பட்டுள்ளதா என உடனடியாக பரிசீலித்து நடவடிக்கையெடுக்குமாறும் அரசாங்க அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குப்பிளான் தெற்கில் மின்னல் தாக்கி இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.